Skip to main content

'அண்ணன் கொடுத்த சீர் என சொன்னதை கேட்டு...'- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Chief Minister M. K. Stalin's speech In dharmapuri

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு நல திட்டங்கள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் 114.19 கோடி மதிப்பில் 75 திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதுபோல் 350.50 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 993 திட்டங்களை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கோவை சரக டிஐஜி தலைமையில் 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் என பலரும் இந்த நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தர்மபுரி என்ற உடனே எனக்கு நினைவுக்கு வருவது ஒகேனக்கல்லில் 1,928 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். அந்த திட்டத்திற்கு 2008 ஆம் ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சராக நான் இருந்தபோது ஜப்பானுக்கு சென்று நிதி வசதிகளையும், திட்டமிடுதல்களையும் செய்தேன்.

முதலமைச்சர் கலைஞர் அந்தத் திட்டத்தை அன்று தொடங்கி வைத்தார். ஆனால் ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. உடனே நானே இங்கு நேரில் வந்து போராட்டம் நடத்தினேன். அதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த வகையில் தர்மபுரி மாவட்ட மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்ற மகிழ்ச்சியோடு உங்களிடையே நின்று கொண்டிருக்கிறேன்.

ஔவையின் வரலாற்றில் எப்படி தர்மபுரிக்கு பங்கு இருக்கிறதோ அதேபோல தமிழ்நாட்டு மகளிர் முன்னேற்றத்தில் தர்மபுரிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. 1989 ஆம் ஆண்டு இதே தர்மபுரியில் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற அமைப்பை முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். அதன்படியே கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கின்ற முகாம் இங்குதான் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களும் மகளிர் வாழ்வில் ஒளிவிளக்காக இருந்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற சட்டத்தை இயற்றியதும் கலைஞர்தான். இது பெண் இனத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வழங்கிய அதிகாரக் கொடை.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு டிவியில் ஒரு பேட்டியை பார்த்தேன். அதில் ஒரு பெண் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் ஸ்டாலின் அண்ணன் எங்களுக்கு கொடுத்த சீர் என்று சொன்னார். அப்பொழுது எனக்கு என்ன தோன்றியது என்றால், நம் திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழக மகளிர்க்கும் இந்த திட்டத்தால் ஏற்பட்டுள்ள குடும்ப பாசத்தை எண்ணி நெகிழ்ந்து போனேன். மத்திய அரசு மாநிலங்களின் நிதி ஆதாரத்தை பறித்து அழிக்க நினைக்கிறது. பிரதமர் வருவது சுற்றுப்பயணம் அல்ல வெற்றுப் பயணம். தமிழ்நாட்டை சுரண்டியவர்களால் இது போன்ற சாதனை பட்டியலை வெளியிட முடியுமா?'' என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்