
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (07.07.2021) சென்றிருந்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நாகை மாவட்ட எல்லையான கொளப்பாடு பகுதியில், நாகை மாவட்ட திமுகவினர் வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்டு திருக்குவளைக்கு வருகைபுரிந்த மு.க. ஸ்டாலின், அங்குள்ள அவர்களின் குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்குச் சென்று குடும்பத்தினரோடு சாமி தரிசனம் செய்தார். பின் ஆலயத்தில் இருந்து கலைஞர் பிறந்த இல்லத்திற்கு நடந்து சென்றார். அங்கு இருந்த அஞ்சுகம் அம்மையார், முத்துவேலர், முரசொலிமாறன், முன்னாள் முதல்வர் கலைஞர் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கலைஞர் பிறந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள பழைமையான புகைப்பட தொகுப்புகளைப் பார்வையிட்டார். பின்னர் தனியார் திருமண அரங்கில் பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு, சீராவட்டம் பகுதியில் வெண்ணாற்றில் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் 3.6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை ஆய்வுசெய்தார்.

முதல்வரின் வருகையையொட்டி திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில், 3 ஏ.டி.எஸ்.பி.க்கள், 8 டி.எஸ்.பி.க்கள், 20 இன்ஸ்பெக்டர்கள், 70 சப் இன்ஸ்பெக்டர்கள், 700 போலீசார், 200 ஊர்க்காவல் படையினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முதல்வருடன் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோரும், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாட்டின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆளூர் ஷாநவாஸ், நாகை மாலி ஆகியோர் பங்கேற்றனர்.