Skip to main content

பல்வேறு சிறப்பு தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி என். கிருபாகரன் பணி ஓய்வுபெற்றார்...

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

Chief Justice N. kirubhakaran retired

 

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி என். கிருபாகரன் இன்று (20.08.2021) ஓய்வுபெறுகிறார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன், 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி திருவண்ணாமலை, செய்யூர் தாலுகா, நெடும்பிறை கிராமத்தில் பிறந்தவர். சட்டப்படிப்பை முடித்து, 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி வழக்கறிஞராக பதிவுசெய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய நீதிபதி கிருபாகரன், சிவில் வழக்கு மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். மத்திய, மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றிய கிருபாகரன், 2009ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2011ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக்கப்பட்டார்.

 

ஆகஸ்ட் 20ஆம் தேதி 62 வயதைப் பூர்த்தி செய்வதையொட்டி இன்று ஓய்வுபெறுகிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. நீதிபதி என். கிருபாகரன் தீர்ப்புகள், உத்தரவுகள், வழிகாட்டுதல்கள், நீட் தேர்வு தொடர்பாக அரசியல் கட்சியினர் தமிழ்நாட்டு மாணவர்களை ஏமாற்றக் கூடாது எனவும் உறுதியான நிலையை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். குற்றாலம் நீர்வீழ்ச்சியை சுத்தப்படுத்தும் வகையில் எண்ணெய் குளியலுக்குத் தடை, பாலியல் வன்கொடுமைக்குத் தண்டனையாக ஆண்மை நீக்கம் என பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். வெறுப்பு அரசியலைக் கட்சிகள் கைவிட உத்தரவு, மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி கிருபாகரன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

Chief Justice N. kirubhakaran retired

 

அவர் நீதிபதியாக தனது பணியைத் துவங்கியது முதலே பல்வேறு சிக்கலான வழக்குகளில் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அவை, “தேர்தல் வாக்குறுதிகளைத் தடை செய்யும் சட்டத்தை இயற்றுவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு, கல்வி நிறுவன வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தப்படுத்தக் கூடாது, மது போதையில் வாகனம் ஓட்டுவோரைக் கைது செய்ய வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தல், முறையான ஒதுக்கீடு இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்தல், ஹீரோக்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என ‘கபாலி’ பட வழக்கில் உத்தரவு, தொல்லியல் துறையின் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை வெளியிட உத்தரவு, டிக் டாக் தடை, இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது, இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர், பயணிப்பவர் இருவரும் கட்டாயம்  ஹெல்மெட் அணிய உத்தரவு.

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகள் அறிவிப்பு வழக்கு, நீட் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை, நீட் தேர்வில் தோல்வியால் ஏற்பட்ட தற்கொலையைப் புனிதப்படுத்துவதை நிறுத்த அரசியல் கட்சியினருக்கு உத்தரவு, குரு பூஜைகளுக்கான வழிகாட்டுதல்கள், சதுப்பு நிலத்தின் பாதுகாப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சிறப்பு இடஒதுக்கீடு, வேகக் கட்டுபாட்டுக் கருவிகளை வாகனங்களில் பொருத்த உத்தரவு, வழக்குகளின் தேக்கத்தைக் கருத்தில்கொண்டு சென்னையில் 4 குடும்ப நீதிமன்றங்களை அமைக்க உத்தரவு, வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி, சட்ட அதிகாரி நியமனத்தில் அரசியல் தலையீடு கூடாது,  பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடுக்க உத்தரவு, மதுரையில் உயர் நீதிமன்ற பெஞ்சிற்கு எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுவது, எச்ஐவி பாசிட்டிவ் ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை,  வீடு, இருசக்கர வாகனம், இழப்பீடு வழங்குதல்.

 

sdgds

 

திருமணம் செய்ததற்காக கல்லூரி மாணவனை வெளியேற்ற முடியாது, சென்னை மாநகராட்சி சொத்து வரியை 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்துவதற்கான வழிகாட்டுதல், மொழியியல் பேரினவாதம் தொடர்பான உத்தரவு, புதிய சாலைகளை அமைப்பதற்கு முன் பழைய சாலையைத் தோண்டி எடுத்தல், ஜப்தி செய்யப்பட்ட 1,500 பேருந்துகளை வெளியிட்டது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பரிந்துரை, பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் உடலைப் பிரேதப் பரிசோதனை வழக்கு, மெட்ராஸ் சட்டக் கல்லூரிகளின் இடமாற்றம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் 109 உதவி பேராசிரியர்கள் நியமனம், கரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்சனை, உள் காயங்களையும் இஎஸ்ஐ சட்டத்தில் சேர்க்க வழிகாட்டுதல், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட 144 மருத்துவ மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க உத்தரவு, பி.எஸ்.எம்.எஸ்.  படிப்பில் திருநங்கையைச் சேர்க்க உத்தரவு” இவ்வாறான பல வழக்குகளில் அதிரடியான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்