Skip to main content

கனகசபை விவகாரம்; உச்சக்கட்ட பரபரப்பில் சிதம்பரம் நடராஜர் கோவில்

Published on 27/06/2023 | Edited on 27/06/2023

 

chidambaram natarajar temple issue

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபட கோவில் தீட்சிதர்கள் தடை விதித்து பதாகை வைத்திருந்தனர். இதனை அறிந்த பக்தர்கள் மற்றும் கோவில் தீட்சிதர்களின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். அதன் பெயரில் காவல்துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் கடந்த 24 ஆம் தேதி பதாகையை அகற்றச் சென்றபோது தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர்.

 

இதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டது. பதாகையை அகற்றிய பிறகும் பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபட தீட்சிதர்கள் அனுமதி மறுத்து வந்தனர். இந்த நிலையில் 27 ஆம் தேதி மாலை சிவபக்தர் ஜெமினி ராதா உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டவர்கள் கனகசபை வாயிலில் அமர்ந்து கனகசபையில் ஏறி வழிபட அனுமதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது பாரதிய ஜனதா கட்சியினர், சங்பரிவார் அமைப்புகள் அங்கு கூட்டமாக வந்து இவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கோவிலில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கனகசபையின் மற்றொரு வழியாக ஏறி வழிபட முயன்றனர். ஆனால், தீட்சிதர்கள் அவர்களை ஏறவிடாமல் தடுத்து கீழே தள்ளிவிட்டனர். இதனையடுத்து தீட்சிதர்கள் அனைவரும் கனகசபையை பூட்டிவிட்டு கீழே வந்து காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கோவில் நகையைத் திருட வந்தார்கள் எனக் கூறி தீட்சிதர்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

 

chidambaram natarajar temple issue

 

இந்நிலையில் இதுகுறித்து தீட்சிதர்கள் சார்பில் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் சிவராமன் மற்றும் வழக்கறிஞர் சந்திரசேகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “கோவிலில் தீட்சிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தடையை மீறி காவல் துறையினர் உதவியுடன் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் கனகசபையில் ஏறியுள்ளனர். இது ஆகம விதிக்கு எதிரானது. எனவே இனிவரும் காலங்களில் இந்த கோவிலுக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் கனகசபையில் பூஜையில் இருந்த கற்பக கணேச தீட்சிதரை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தள்ளிவிட்டதில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவரது உடைகள் ஈரமாகி பூணூல் அறுபட்டுள்ளது” எனக் கூறினர்.

 

இதனிடையே இதுகுறித்து அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை சார்பில் கூறுகையில், “இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் அரசாணையை நிறைவேற்றும் வகையில் அமைதியான முறையில் கனகசபையில் ஏறி வழிபாடு செய்துவிட்டு உடனே கீழே இறங்கிவிட்டனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் கூச்சலில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தனர். தீட்சிதர்கள் மீது காவல் துறையினர் மற்றும் அறநிலையத்துறையினரின் சுண்டு விரல் கூட படவில்லை. இவர்கள் கூறுவது தவறானது. மேலும் தீட்சிதரை தள்ளிவிட்ட காட்சிகள் இருந்தால் அதனை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட தீட்சிதர் அமர்ந்த இடத்தில் வீடியோ பதிவுகள் உள்ளது. மேலும், கனகசபையில் தீட்சிதர் அல்லாதவர்கள் ஏறாத நிலையில் இவர்கள் ஏறி வழிபட்டதால் தீட்டு எனக் கருதி, அவர் உடுத்தியிருந்த உடைகள் மற்றும் பூணூலை கழட்டிவிட்டு புது துணியை போட்டுக் கொண்டு மீண்டும் அவர் நல்ல நிலையில் பூஜைக்கு சென்றுவிட்டார் என்பதுதான் உண்மை” எனக் கூறினர். 

 

 

சார்ந்த செய்திகள்