Skip to main content

சிதம்பரம் அருகே தீண்டாமை வேலி... பட்டியல் இனமக்கள் மக்கள் பாதையின்றி அவதி!!!

Published on 15/02/2019 | Edited on 15/02/2019


 

Caste cruelty


கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே காட்டுமன்னார்குடி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் புதுபூலாமேடு என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆதிதிராவிட சமூகத்தின் வள்ளுவர் பிரிவை சேர்ந்த 30 குடும்பங்கள் ஒரே தெருவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் பகுதிக்கு அரசு சார்பில் சாலைவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் பயன்படுத்தி வந்த சாலை பிற்படுத்தப்பட்ட சமூகமான வன்னியருக்கு சொந்தம் எனக்கூறி இதில் யாரும் நடக்கக்கூடாது என மூங்கில் வேலி அமைத்து தெருவின் பாதைய அடைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வேலியை எடுப்பதற்கு பயந்துகொண்டு வேலியை சிறிது விலக்கிவிட்டு சென்று வருகிறார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் வேலியில் உள்ள முட்கள் குத்தியவாறு வேலியை கடந்து சென்று வருகிறார்கள். மேலும் இந்த வேலியால் பெரும் அவதியை அனுபவிக்கின்றனர்.
 

இதுகுறித்து சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜனிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த இரு நாட்களுக்கு முன் மனுகொடுத்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் ரசீது மட்டும் கொடுத்துள்ளார். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்தபகுதி மக்களின் குற்றச்சாட்டாக   உள்ளது.
 

சார் ஆட்சியரிடம் சம்பவம் குறித்து கேட்டபோது அப்படியா எனக்கு ஒன்றும் தெரியாது எனக்கூறி, மறுபடியும் அனைத்து விபரத்தையும் கேட்டுக்கொண்டு அதுகுறித்து படங்கள் இருந்தால் அனுப்பிவையுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். அதனை தொடர்ந்து அவரிடம் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கொடுத்த மனுவின் நகல், தெருவை முள்வேலியை கொண்டு அடைத்துள்ள படத்தை அனுப்பிவைத்துள்ளோம்.
 

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் பட்டியல் இனமக்கள் வசிக்கும் பொதுப்பாதையை அடைப்பது என்பது கொடிய தீண்டாமையின் வடிவம். இந்த பகுதியில் உள்ள மக்கள் அந்தப்  பாதையை சுதந்திரமாக பயன்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தபட்ட அரசு அதிகாரிகள் போர்கால அடிப்படையில் எடுக்கவேண்டும். அங்கு வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். சம்பந்தபட்டவர்கள் மீது சம்பவத்தின் உண்மை தன்மையை அறிந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.