Skip to main content

சிக்னல்களில் பிச்சையெடுக்கும் வடமாநில பெண்களிடம் இருப்பது கடத்தப்பட்ட குழந்தைகளா? - உயர் நீதிமன்றம் கேள்வி!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

chennai highcourt

 

தமிழகத்தில் குழந்தைகள் கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, உள்துறை மற்றும் சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர்கள், ஜனவரி 25 -ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 -ஆம் ஆண்டு, சென்னையில் பாரிமுனை பகுதியில் தெருவோரம் தூங்கிய 8 மாத குழந்தை ராகேஷும், வால்டாக்ஸ் சாலையோரம் தூங்கிய சரண்யாவும் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கக்கோரி எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.

ஏற்கனவே இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குழந்தை கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தை கடத்தல் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘குழந்தைகள் கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் சிறார் நீதிச்சட்ட விதிகளைப் பின்பற்றாமல் செயல்படும் சிறார் காப்பகங்கள் மீது, இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? லாப நோக்கில் செயல்படும் இதுபோன்ற காப்பகங்களால்தான் ஆதரவற்ற குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கரோனா பேரிடர் காலத்தில் இது போன்ற காப்பகங்களில் தங்கியிருந்த ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சிறார்களின் நலனுக்காக ஒரு பொது நல வழக்கு கூட தொடரப்படவில்லை. தமிழக அரசும் அவர்கள் குறித்துக் கவலைப்பட்டதாக தெரியவில்லை.


அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்பதால் தான் அவர்கள் மீது யாரும் அக்கறை கொள்ளவில்லையா? பல டிராஃபிக் சிக்னல்களில் ஏராளமான குழந்தைகளை வைத்து, வட மாநில பெண்கள் பிச்சை எடுப்பது அதிகரித்து வருகின்றன. அவர்கள் வைத்திருப்பது கடத்தப்பட்ட குழந்தைகளா? அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்தப்படுகிறதா என்பது குறித்து ஏன் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்வதில்லை. காலியாக உள்ள மாநில குழந்தைகள் நல ஆணையப் பதவிகள் நிரப்பப்படவில்லை. 2016 -ஆம் ஆண்டு முதல், பல உத்தரவுகள் பிறப்பித்தும் குழந்தை கடத்தல் வழக்குகளை காவல்துறையினர் முறையாகக் கையாளவில்லை.’ என வேதனை தெரிவித்தனர்.

 

cnc


மேலும், தமிழகத்தில் குழந்தை கடத்தல் தொடர்பாக பெறப்பட்ட புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 25- ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, உள்துறை மற்றும் சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர்கள், கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்