Skip to main content

பொதுப் பாதையை ஆக்கிரமித்த கோவில் நிர்வாகம்..! அகற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்..! 

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

high court

 

பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ராமாபுரம் கலசத்தம்மன் கோவில் ஆக்கிரமிப்புகளை மூன்று மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை, ராமாபுரத்தில் உள்ள கலசத்தம்மன் கோவிலுக்கு, பொதுப் பாதையை ஆக்கிரமித்து மண்டபம் கட்டியுள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி ஆணையர், அப்பகுதி வட்டாட்சியர், கோவில் நிர்வாகத்தினர் அடங்கிய குழுவை அமைத்து, ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பொது நிலத்தை ஆக்கிரமித்துள்ளதைக் கோவில் நிர்வாகம் ஒப்புக்கொண்டாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி, ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் மறுத்துவிட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால், ஆக்கிரமிப்புக்களை அகற்ற விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவுசெய்த நீதிபதிகள், இந்த ஆக்கிரமிப்பை மூன்று மாதங்களில் அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்