Skip to main content

தலைக்கேறிய போதை; தூக்கி வீசப்பட்ட இளைஞர் - நள்ளிரவில் நடந்த கோர சம்பவம்! 

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

car rammed into an inebriated man and passed away

 

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது செந்துறை கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் கொளஞ்சி. 60 வயதான இவர், தான் வசிக்கும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்லம்மா. இந்த தம்பதியின் மகனான சீமான் என்பவருக்கு 32 வயதாகிறது. மேலும், இவருக்கு திருமணம் ஆகாததால் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார்.

 

இந்நிலையில், அரியலூரில் இருந்த சீமான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்துள்ளார். மேலும், கோவைக்கு வந்தவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில், சீமானுக்கு மது அருந்தும் பழக்கம். தான் வேலைக்கு செல்லாத நாட்களில் அடிக்கடி மது குடித்துவிட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

 

அந்த வகையில், கடந்த 9ஆம் தேதியன்று சீமான் வேலை தொடர்பாக பல்லடம் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு தனது வேலையை முடித்துக்கொண்டு மது அருந்தியுள்ளார். இதனிடையே, தலைக்கேறிய போதையில் இருந்த சீமான் நடுரோட்டில் அங்கும் இங்குமாய் சுற்றித் திரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அன்றிரவு 11 மணியளவில் பல்லடத்துக்கு அருகே உள்ள காளிவேலம்பட்டி என்ற இடத்திற்கு வந்துள்ளார்.

 

அப்போது அங்கே இருக்கும் கொங்கு திருமண மண்டபத்தின் முன்பு போதையில் அங்குள்ளவர்களிடம் தகராறு செய்திருக்கிறார். மேலும், அந்த வழியாக வரும் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில், அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சீமான் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட சீமான் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதற்கிடையில், சீமானின் உடல் சாலையில் நடுவிலேயே இருந்துள்ளது.

 

ஆனால், அது இரவு நேரம் என்பதால் சீமானின் சடலம் மற்ற வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது. மேலும், அந்த இடத்தில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் சுமார் 6 நிமிடத்திற்கு மேலாக பேருந்து, லாரி, கார் என அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சீமானின் உடலில் ஏறி இறங்கியது. ஒருகணம், இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் உயிரிழந்த சீமானின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விபத்து சம்பவம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, உயிரிழந்த சடலத்தின் மேல் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து ஏறிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்