Skip to main content

'அமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது'- அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக உத்தரவு!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

'cannot offer to Minister ' - ordered Minister Senthil Balaji to appear!

 

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 8ம் தேதி ஆஜராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்ட சென்னை எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் என்பதால் சிறப்புச்  சலுகை ஏதும் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

 

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கி வருவதாக, கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

 

இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மூன்று வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விலக்கு பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் மீதமுள்ள இரு வழக்குகளும், சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி அலிசியா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை.

 

அமைச்சர் என்பதாலும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட துறை சார்ந்த கூட்டம் இருப்பதால் இன்று ஆஜராகவில்லை என்று அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் என்பதால் மட்டும் சிறப்புச் சலுகை வழங்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, விசாரணையை வரும் ஆகஸ்ட் 6ம் தேதிக்குத் தள்ளி வைத்து, அன்றைய தினம் கண்டிப்பாக ஆஜராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்