Skip to main content

பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட குறவர் சமூக குடும்பம் - குமரியில் மற்றுமொரு நடத்துநரின் மனிதாபிமானமற்ற செயல்!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

The bus driver who dropped the narcissist family half way!

 

கன்னியாகுமரியில் மீனவ பெண் ஒருவர், பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் குறவர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பமே பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கன்னியாகுமரியில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட மீனவரான செல்வமேரி பாட்டியின் அழுகுரல் இன்னும் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. அதற்குள் அதே மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த முதியவர் பெண் மற்றும் சிறுமி ஆகியோர் பயணித்துள்ளனர். சிறிது நேரத்திலேயே அவர்களது உடைமைகளைப் பேருந்தில் இருந்து சாலையில் வீசி எறிந்த நடத்துநர், அநாகரிகமான தகாத வார்த்தைகளால் திட்டிய படியே சிறுமியை முதலில் சிறுமியை இறக்கிவிட்டுள்ளார். பின்னர், முதியவரும், பெண்ணும் வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். 

 

கடந்த சில நாட்களுக்கு முன் மீனவ பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு முதலமைச்சரே கண்டனம் தெரிவித்திருந்தார். அந்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர், நடத்துநர், நேர காப்பாளர் ஆகியோர் மீது பணி இடை நீக்கம் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனாலும், இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதனிடையே, சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து போக்குவரத்துத்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.