Skip to main content

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ரவுடி சீசிங் ராஜாவின் கூட்டாளி கைது!

Published on 27/08/2024 | Edited on 27/08/2024
bsp armstrong case Sising Raja friend arrested

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யச் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

அதே சமயம் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட சுமார் 200 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் ரவுடிகளான சீசிங் ராஜா மற்றும் சம்போ செந்திலை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

bsp armstrong case Sising Raja friend arrested

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவின் கூட்டாளியும், நெருங்கிய நண்பருமான ரவுடி சஜித் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது 4 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள், அடிதடி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ரவுடி சஜித் கடந்த சில ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தாம்பரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரவுடி சீசிங் ராஜாவின் இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்