Skip to main content

காணாமல் போன உடன்பிறப்புகளைப் பல ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடித்த சகோதரர்கள்!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

Brothers who found missing siblings many years later

 

திருச்சியைச் சேர்ந்த சண்முகம்-பார்வதி தம்பதியர், இருவரும் சேர்ந்து ஊர் ஊராகச் சென்று ஜோதிடம் பார்ப்பதைத் தொழிலாகச் செய்து வந்துள்ளனர். அப்படிச் செல்கையில்  கடந்த 2013ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையத்தில், ஏழு வயது மகள் மற்றும் இரண்டு வயது மகனைத் தவறவிட்டுள்ளனர்.  அங்கு அவர்கள் இருவரும் யாசகம் எடுத்து வந்துள்ளனர். இருவரையும் மதுரை குழந்தைகள் நலக் குழுவினர் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். இருவரும் கருமாத்தூரிலுள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

 

இதை அறிந்த குழந்தையின் பெற்றோர் சண்முகம்-பார்வதி தம்பதி கருமாத்தூர் காப்பகம் சென்று ஓரிரு முறை குழந்தைகளைப் பார்த்தனர்.விசாரணையில், அவர்களுக்கு குமார், ராஜ்குமார், மீனாட்சி, மாசாணம் ஆகிய குழந்தைகள் இருப்பதும், திருச்சி அருகிலுள்ள சர்கார்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்தது. குழந்தைகளின் படிப்பைக் கருத்தில் கொண்டு அங்கேயே விட்டுச் சென்றனர். சண்முகம் - பார்வதி தம்பதியின் 4 குழந்தைகளும் வளர்ந்து, புதுக் கோட்டை, தஞ்சாவூர் போன்ற இடங்களில் ஜோசியம் தொழில் புரிகின்றனர். இந்நிலையில் சண்முகம், பார்வதி தம்பதியர் இறந்துவிட்டனர். பெற்றோர்கள் மறைந்த நிலையில் காணாமல் போன உடன் பிறப்புகளை மூத்த சகோதரர் குமார் பல ஊர்களில் தேடி வந்துள்ளார். 

 

இதற்கிடையில், தனது தம்பி, தங்கையைப் பார்க்க ஆசைப்பட்ட குமார், ராஜ்குமார், உள்ளிட்டோர் மதுரை குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சண்முகம், நலக்குழு உறுப்பினர் பாண்டிய ராஜாவை அணுகினர். இரு வரும் கடச்சனேந்தலில் உள்ள காப்பகத்தில் தங்கி இருப்பதும் தம்பி 5-ம் வகுப்பும், காந்திகிராமம் காப்பகத்தில் சகோதரி 9-ம் வகுப்பும் படித்து வருவது தெரியவந்தது. நேற்று இருவரையும் குழந்தைகள் நலக்குழுவினர் அழைத்து வந்தனர். அவர்களுடன் குமார், ராஜ்குமார், மாசாணம், மீனாட்சி ஆகியோர் சந்தித்து மகிழ்ந்தனர். 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் சந்தித்தாலும் கல்வியைக் கருத்தில் கொண்டு காப்பகத்திலேயே தொடர்ந்து இருக்கட்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்