Skip to main content

காதலனின் அண்ணனை அடித்துக் கொன்ற காதலியின் அண்ணன்!

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

Boyfriend's brother passed away love issue

 

நாகை அருகே காமேஸ்வரத்தில் வீடு புகுந்து வீட்டில் இருந்தோரை தாக்கிவிட்டு, காதலன் வீட்டில் இருந்த பெண்ணை பெண்வீட்டார் கடத்திச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த காதலனின் மாற்றுத் திறனாளி அண்ணன்  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர்கள் வீரமணி, தமிழ்ச்செல்வி தம்பதி. இவர்களது இளைய மகன் தினேஷும் புதுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மகள் சுகுணாவும் காதலித்து வந்துள்ளனர். 

 

கடந்த மாதம் 25ம் தேதி சுகுனா காதலனோடு சேர்ந்து வாழ்வதற்காக காமேஸ்வரத்தில் உள்ள தினேஷ் வீட்டிற்கு வந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுகுணாவின் சகோதரர் மைக்கேல் டைசன் மற்றும் அவரது நண்பர்களான சென்னையைச் சேர்ந்த அப்துல் சலாம், வீரசேகரன், முரளி, கேசவன் உள்ளிட்டோர் தினேஷின் வீட்டில் புகுந்து சுகுணாவின் காதலன் தினேஷ், அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் அய்யப்பன் ஆகியோரை கொடூரமாகத் தாக்கிவிட்டு சுகுனாவை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றனர். 

 

மைக்கேல் டைசன் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அய்யப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸில் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த அய்யப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அருகே காதல் விவகாரத்தில் காதலனின் அண்ணனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்