
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து மீன்சுருட்டி, பாப்பாக்குடி, வழியாக நரசிங்கப்பாளையம் கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது. வழக்கம்போல் நேற்று அந்தப் பேருந்து பயணிகளுடன் நரசிங்க பாளையம் கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது பேருந்து நிறுத்தம் அருகே பிரேம்குமார்(25) என்ற இளைஞர் ஒருவர் கையில் பெட்ரோல் குண்டுடன் பேருந்தை நோக்கி வந்துள்ளார். இதனை சுதாரித்துகொண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பேருந்து மீது பிரேம்குமார் பெட்ரோல் குண்டை வீச அது நாளாபுறமும் வெடித்து சிதறியது. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் இறங்கி ஒடினர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரேம் குமாரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை பிரேம் குமார் காதலித்து வந்திருக்கிறார். அந்தப் பெண்ணும் அவரை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அந்தப் பெண் பிரேம்குமாரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் பிரேம்குமார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அந்தப் பெண் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பேருந்தில் ஏறியுள்ளார். அவரை அந்த பேருந்தில் ஏற விடாமல் தடுக்கவே பேருந்து முன்பு பெட்ரோல் குண்டை வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மீன்சுருட்டி போலீசார் பிரேம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.