![BJP executive Amar Prasad Reddy released on bail](http://image.nakkheeran.in/cdn/farfuture/EJp-nGN-aBLHzpL5H8mfl6VJIdeYWcIQ-zTycpSbr7M/1699679127/sites/default/files/inline-images/993-pon_53.jpg)
அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டிற்கு அருகே கொடிக் கம்பம் நடும் விவகாரத்தில் அதிகாரிகள் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாகக் கட்சியின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தியதற்காக எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பீர்கள். சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளர்களுக்கு பனிரெண்டாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். மேலும் 55 அடி உயரக் கம்பத்தில் கொடி கண்ணுக்கு தெரியாது. காக்கா, குருவி உட்கார மட்டுமே அந்தக் கொடிக் கம்பம் பயன்படும் எனத் தெரிவித்ததோடு மீண்டும் கொடிக் கம்பம் அமைக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நிபந்தனை விதித்து அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கினார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதையடுத்து, அமர்பிரசாத் ரெட்டி புழல் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதுடன் நேராக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்த அமர்பிரசாத் ரெட்டிக்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.