Skip to main content

Exclusive: பாரதியார் படித்த பள்ளியிலும் சாதிகள் உள்ளதடி பாப்பா...!

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
skol


தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் இயங்கும் ராஜா மேல்நிலைப்பள்ளியில், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கீழ ஈராலை சேர்ந்த தலித் மாணவர்கள் 4 மாணவர்கள், இந்த ஆண்டு பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்தனர். ஏற்கனவே படித்த பள்ளியில் ஒன்றாக இருந்ததால், இந்த பள்ளியிலும் ஒன்றாகவே சுற்றித் திரிந்ததாக தெரிகிறது. இதற்கு மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வாக்குவாதம், கை கலப்பில் முடிந்தது.
 

skol


இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தலித் மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் கூறியிருக்கின்றனர். இதையடுத்து, அந்த மாணவர்களின் பெற்றோர் சனிக்கிழமை வந்து தலைமை ஆசிரியர் முத்துக்குமாரிடம் முறையிட்டுள்ளனர். தலைமை ஆசிரியரோ தாம் விசாரிப்பதாக கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார். தலைமை ஆசிரியரும், சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து பேசியிருக்கிறார். இதையடுத்து, மீண்டும் ஆவேசம் அடைந்த அந்த மாணவர்கள், தலித் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனை வீரியமடைந்ததை உணர்ந்த வருவாய்த் துறையினர், இரு தரப்பையும் அழைத்து பேசி இருக்கிறது. மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், இருதரப்பும் சமாதானமாக செல்லும்படி அறிவுறுத்தியது. இனிவரும் காலங்களில் மோதலை தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பது என்றும், பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது என்றும் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
 

ettaiyapuram


"சாதிகள் இல்லையடி பாப்பா..

குலம் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..." என்று மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய பாரதியார் படித்த பள்ளியில் தான் இந்த கொடுமை! இன்று அவரது 97-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

“நெல்லையில தான் சாதி தாக்கம் அதிகளவுல இருக்கு” - சீமான் ஆவேசம்

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

seeman says about caste issue in thirunelveli

 

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் இளைஞர்கள் இரண்டு பேர் குளிக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, அவர்களை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களிடமிருந்து செல்போன்களைப் பிடுங்கி பயங்கரமான ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர். பின்னர் இரு இளைஞர்களையும் சாதி கேட்டு, அவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தவுடன் மீண்டும் அவர்களை சரமாரி தாக்குதல் நடத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்துக் கொடூரமாக நடந்துகொண்டுள்ளனர். மேலும், மாலை முதல் இரவு வரை இருவரையும் வைத்து அந்த கும்பல் சித்திரவதை செய்துள்ளனர். 

 

இதனைத் தொடர்ந்து இருவரையும் அந்த கும்பலிடம் இருந்து மீட்ட பொதுமக்கள், பாதிக்கப்பட்ட இளைஞர்களை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 6 பேரையும் கைது செய்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், “திருநெல்வேலி மாவட்டத்தில் தான் சாதி தாக்கம் அதிகளவில்  இருக்கிறது. சமீபத்தில் கூட பள்ளி மாணவரின் வீட்டில் புகுந்து வெட்டினார்கள். இதெல்லாம் நச்சு சிந்தனைகள். இதையெல்லாம் கடும் சட்டங்கள் மூலமாக ஒழிக்க வேண்டும். சாதிய எண்ணமே எழக்கூடாது. பள்ளிக்கூடத்திலேயே சாதி இருக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது என்று சனாதன ஒழிப்புவாதிகள், சமூகநீதி காவலர்களிடம் தான் கேட்க வேண்டும்.

 

மற்ற மாநிலங்களில் பெயருக்கு பின்னால் சாதியின் பெயரை வைத்திருப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதியின் பெயரை போடமாட்டார்கள். அதற்கு பதிலாக சாதிக்கும், மதத்துக்கும் கட்சி வைத்திருப்பார்கள். மற்ற மாநிலத்தவர்கள் எல்லாம், பிரிந்து வாழ்வார்கள். ஆனால் ஒன்றாக செயல்படுவார்கள். தமிழ்நாட்டு மக்கள் சேர்ந்து வாழ்வார்கள். ஆனால், பிரிந்து செயல்படுவார்கள். இது தான் வேறுபாடு. வரவிருக்கிற தலைமுறைக்கு இந்த சாதிய நஞ்சுகள் வராத படி வளர்த்து விடவேண்டும்” என்று கூறினார்.   

 

 

 

Next Story

சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்தப்பட வேண்டும்?; விளக்கும் ராகுல் காந்தி

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Rahul Gandhi Explained  Why caste wise census should be conducted?;

 

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்  நேற்று (09-10-23) நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கர்நாடாக முதல்வர் சித்தராமையா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் மற்றும் இமாச்சல் பிரதேசம் முதல்வர் சுக்விந்தர் சுகு ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

இந்தச் செயற்குழுக் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, “சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக ஆதரிக்கிறது. இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகின்றன. காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்களை வெளியிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அரசியல் அல்ல; அது நீதியின் அடிப்படையிலான கோரிக்கை. பா.ஜ.க.வால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாவிட்டால், அக்கட்சி ஆட்சியில் இருந்து விலகட்டும். 

 

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் பிரதமர் மோடி பயந்து போய் மக்களை திசைதிருப்ப முயற்சி செய்கிறார். பா.ஜ.க. ஆளும் 10 மாநில முதல்வர்களில் ஒரே ஒருவர் தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓ.பி.சி.) சேர்ந்தவர். ஆனால், காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களின் முதல்வர்களில் மூன்று பேர் ஓ.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள். பிரதமர் மோடி, இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. நாங்கள் மதம், சாதியை வைத்து மக்களை பிரிக்க முயற்சிக்கவில்லை. அவர்களின் உரிமைகளைப் பெற முயற்சிக்கிறோம்” என்று பேசினார்.

 

அப்போது திடீரென்று செய்தியாளர்களை நோக்கி, உங்களில் எத்தனை பேர் பட்டியல் சாதியினர் இருக்கிறீர்கள்? என்று ராகுல் காந்தி கேட்டார். அதற்கு யாரும் கை தூக்கவில்லை. இதனையடுத்து, உங்களின் எத்தனை பேர் பழங்குடியினர்? எனக் கேட்டார். அப்போது யாரும் கை தூக்கவில்லை. உங்களில் எத்தனை பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்? என்று கேட்டார். அதற்கும் யாரும் கை தூக்கவில்லை. அப்போது ராகுல் காந்தி,” நமது நாட்டின் நிலை இது தான். இதற்காகத் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்கிறோம்” என்று கூறினார்.