Skip to main content

கடற்கரை மற்றும் கோவில் குளங்களில் மூழ்கி உயிரிழப்பு! -எண்ணிக்கை விபர அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசுக்கு கெடு!

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

கடற்கரை, கோவில் குளங்களில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை விவர அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
 

தமிழகத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பது என்பது தொடர் நிகழ்வாக இருப்பதால், கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், கோவில் குளங்கள், அருவிகளில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் நீச்சலில் நிபுணத்துவ வாய்ந்தவர்கள் கொண்ட குழு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 At the beach and temple pools incident chennai high court


அந்த மனுவில், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, கடந்த 2014- ஆம் ஆண்டில் மட்டும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 884 ஆக உள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் உயிரிழந்தவர்கள் 90 விழுக்காட்டினர் 12 வயதிற்குட்பட்டவர்கள் எனவும், இந்த மரணங்களைத் தடுக்க கடற்கரைகளில் கண்காணிப்பு கோபுரங்களை அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு, உயிரிழப்பை தடுக்கும் வகையில் கோவில் குளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை மற்றும்  உயிரிழந்தவர்களின் விவரங்களையும் அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று (02.01.2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஆனால், தமிழக அரசு கால அவகாசம் கேட்டது.  இதையடுத்து, நீதிபதிகள் வரும் பிப்ரவரி 3- ஆம் தேதி வழக்கைத் தள்ளிவைத்துவிட்டு, அன்று அறிக்கையினைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பொங்கல் பண்டிகை விடுமுறை வருவதால் நீர்நிலைகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதிகள், அரசு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்