Skip to main content

வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்தை நூதன முறையில் திருடிய வங்கி ஊழியர் கைது

Published on 23/10/2018 | Edited on 24/10/2018
sbi

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர்  வளர்மதி.  இவர் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.  அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 60 ஆயிரம்  திடீரென மாயமானது.  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வங்கியின் முதன்மை மேலாளர் ஸ்ரீ ராமன் என்பவரிடம் புகார் அளித்தார். 

 

 புகாரின் பேரில்  வளர்மதியின் வங்கி கணக்கை சரிபார்த்த போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ 60,000 இரண்டு தவணையாக அதே வங்கியில் பணிபுரியும் சிதம்பரம் காந்தி நகரை  சேர்ந்த அசோக்குமார் மகன் சந்தோஷ்குமார் என்பவர் கணக்கிற்கு சென்றுள்ளது.  எனவே இவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது., இதனை  தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது அதே வங்கியில் கணக்கு வைத்துள்ள அன்புக்கரசு கணக்கிலிருந்து ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம், கலா என்பவர் கணக்கில் ரூபா 90 ஆயிரம், கலைச்செல்வி என்பவர் கணக்கிலிருந்து ரூபா 59 ஆயிரத்து 900,  ராஜதுரை என்பவர் கணக்கிலிருந்து ரூபாய் 50 ஆயிரம் என ஐந்து வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூபாய் 5 லட்சத்து 9 ஆயிரத்து 900 பணத்தை நூதன முறையில் கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது.

 

sb

 

இதுகுறித்து வங்கியின் மேலாளர் சிதம்பரம் காவல்துறையில் புகார் அளித்தார் அதன் பேரில் சந்தோஷ்குமாரை கைது செய்து  சிறையில் அடைத்துள்ளனர்.  விசாரணையில் சந்தோஷ் குமார் பிஇ., ஐடி. படித்துவிட்டு  வங்கியில் கிரெடிட் கார்டு பிரிவில் வேலை செய்து வருகிறார். கிரடிட் கார்டு சம்பந்தமாக வரும் வாடிக்கையாளர்களிடம் தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு எண்களை பெற்று சரி பார்க்கிறேன் என்ற முறையில் பணத்தை நூதனமுறையில் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. வங்கி ஊழியரே வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடித்தது வ்ங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இவருக்கு ஆன் லைன்மூலம் வங்கி கணக்கில் திருடும் கும்பலுடன் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் வங்கி அதிகாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எஸ்.பி.ஐ வங்கிக்கு மீண்டும் குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
The Supreme Court again blocked SBI Bank

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தை எதிர்த்து ஏ.டி.ஆர்., காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி (15.02.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் 5 நீதிபதிகளும் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என ஒருமித்த கருத்துகளைத் தீர்ப்பாக வழங்கினர். மேலும் மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும். அதனை மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணையப் பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர். ஆனால் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.

இது தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 11 ஆம் தேதி (11.03.2024) நடைபெற்ற விசாரணையில், மார்ச் 12 ஆம் தேதி மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வெளியிடவும், அதனை மார்ச் 15 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது இணையத்தில் வெளியிடவும் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை, தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி நேற்று கடந்த 12 ஆம் தேதி (12.03.2024) வழங்கியது. இதனையடுத்து தேர்தல் பத்திர விபரங்களை, தனது இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் தேர்தல் பத்திரங்களை நிறுவனங்கள், தனி நபர்கள் வாங்கிய விவரங்கள் தேதி வாரியாக இடம்பெற்றிருந்தன. அதாவது 337 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் விபரங்களும், 426 பக்கங்களில் அதனை பணமாக மாற்றிய கட்சிகளின் விபரங்களும் அடங்கி இருந்தன.

அதில் அதிகபட்சமாக நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக முதலிடத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 6,060 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1,609 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாயும், பிஆர்எஸ் கட்சி 1,214 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக லாட்டரி நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் அதிக நன்கொடை கொடுத்துள்ளது. மொத்தமாக அந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வழங்கியுள்ளது. மெகா இன்ஜினியரிங் மற்றும் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் 966 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளது. 187 தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

The Supreme Court again blocked SBI Bank

அதே சமயம் தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த 15ஆம் தேதிஉச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீலிடப்பட்ட கவரில் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? என எஸ்.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பினர். மேலும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்க சொல்லியிருந்தோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களையும் எஸ்.பி.ஐ. வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். 

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (18-03-24) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள், ‘உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்புப்படி பத்திர எண்களை வெளியிட வேண்டும். தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.யின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. இந்த வழக்கின் தீர்ப்பை செயல்படுத்துவதில் எஸ்.பி.ஐ வங்கியின் அணுகுமுறை சரியில்லை. ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள எண்ணையும் ஏன் எஸ்.பி.ஐ வங்கி இன்னும் தெரிவிக்கவில்லை?. தேர்தல் பத்திரம் சார்ந்த அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். மறைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் எஸ்.பி.ஐ பொதுவெளியில் வெளியிட வேண்டும். ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண்ணை கட்டாயம் வெளியிட வேண்டும். இந்த தேர்தல் பத்திர எண்களை வரும் மார்ச் 21-ஆம் தேதிக்குள் அனைத்தையும் வெளியிட வேண்டும்’ என்று கூறி உத்தரவிட்டனர். 

Next Story

“பா.ஜ.கவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட வேண்டும்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Mallikarjun kharge said Bank accounts of BJP should be frozen

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத் ஸ்டேட் வங்கி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தேதியை நிர்ணயித்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திலும் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி வாங்கிய தொகை ஆகியவை விவரங்களாக தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் பென்டிரைவ் வடிவில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தேர்தல் பத்திரம் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக முதலிடத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 6,060 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1,609 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாயும், பிஆர்எஸ் கட்சி 1,214 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன. திமுக 617 கோடி ரூபாயும் பெற்றுள்ளது. தேர்தல் பத்திரம் குறித்த தகவல் வெளியான நிலையில் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் மொத்த வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக எப்படி பணம் சம்பாதித்தது என்பதை இன்று உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வின் அறிவுறுத்தலின் பேரில், காங்கிரஸ் கட்சி கணக்குகளை வருமானத்துறையினர் முடக்கிவிட்டனர்.  எங்களின் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. இதை வைத்து எப்படி தேர்தலுக்கு செல்வது?

எங்கள் கணக்குகள் முடக்கப்படும், ஆனால் அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படாமல் இருக்கும். பாஜகவிற்கு இவ்வளவு பெரிய தொகை, எப்படி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக கிடைத்தது.  இவர்கள் தொழிலதிபர்களையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் மிரட்டி இந்த பணத்தை வாங்கினார்களா அல்லது லஞ்சமாக பெறப்பட்டதா போன்றவை குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். அதுவரை பாஜகவின் வங்கி கணக்கு முடக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

அதேபோன்று, கார்கே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மொத்தமாக வசூலிக்கப்பட்ட தேர்தல் பத்திரப் பணத்தில் பாஜகவுக்கு 50% நன்கொடை கிடைத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 11% நிதி மட்டுமே கிடைத்தது. சந்தேகத்திற்குரிய பல நன்கொடையாளர்கள் உள்ளனர். இவர்கள் யார்? இவை எந்த நிறுவனங்கள்? அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ போன்ற ரெய்டுகளுக்குப் பிறகுதான், பல நிறுவனங்கள் நன்கொடை அளித்திருக்கிறது.  அத்தகைய நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்தது யார்? பாஜகவின் இந்த ஊழலை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் உயர்மட்ட விசாரணையை நாங்கள் கோருகிறோம். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஆனால், கோடி, கோடியாக பணம் சம்பாதித்த பாஜக மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விசாரணையுடன் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியின் சட்ட விரோதமான தன்மை காரணமாக பாஜகவின் வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும் என்று கோருகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.