Skip to main content

பிறந்து ஒரே நாளான குழந்தை இறப்பு! மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்! 

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

Baby dies on the same day as birth! Relatives besieging the hospital!

 


ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள அடையன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத், மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மங்கையர்க்கரசி இவர்களுக்கு 4 வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.

 

இந்த நிலையில் மங்கையர்க்கரசி மீண்டும் கர்ப்பமுற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மங்கையர்க்கரசிக்கு சென்ற இரண்டு நாட்களுக்கு முன் 19ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிரசவத்திற்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அன்று காலையிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருந்து வந்தனர். இந்நிலையில் 21ந் தேதி காலை 7 மணிக்கு மங்கையர்க்கரசி தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உள்ளார். பின்னர் அவருக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு பணியாளர்கள் அழைத்துச் சென்றனர்.

 

அப்போது குழந்தை மட்டும் தனியாக இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் அந்த குழந்தையை வந்து பார்த்த போது அது பேச்சு மூச்சின்றி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தையின் தாய் மங்கையர்க்கரசி மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மங்கையர்க்கரசி உடனடியாக கருத்தடை ஆபரேஷன் செய்யாமல் குழந்தையை பார்க்க வந்தார். அப்போது அவரது உறவினர்களும் பிரசவ வார்டில் திரண்டு வந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். குழந்தைக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அங்கிருந்த மருத்துவமனை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது மங்கையர்க்கரசியின்  உறவினர்களில் சிலர் கோபத்தில் ஆஸ்பத்திரியில்  இருந்த கண்ணாடியை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஈரோடு தலைமை மருத்துவமனை போலீசார்,  மருத்துவர்கள் அங்கு விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் குழந்தையின்  உறவினர்கள் சரியான முறையில் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளிக்கவில்லை. அதனால் மங்கையர்க்கரசியை இங்கிருந்து அழைத்துச் செல்கிறோம் என்று அவரை  வெளியே அழைத்து வந்தனர். ஆஸ்பத்திரி நுழைவாயிலில் மீண்டும் அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மங்கையர்க்கரசி திடீரென மயங்கி விழுந்தார்.  

 

இதனால் அவரை மீண்டும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் தொடர்ந்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் மங்கையர்க்கரசி கணவர் சம்பத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மருத்துவர்களும், காவல்துறையினரும் தீர விசாரித்த பிறகே குழந்தை இறப்பின் காரணம் குறித்துத் தெரியவரும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.