Skip to main content

“தன்னாட்சி அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் விசை ஒடிந்த அம்பு”க்கு சமமானது - ஸ்டாலின் 

Published on 16/05/2018 | Edited on 17/05/2018

காவேரி பிரச்சனையில் தற்போது உருவகப்போகவிருக்கும் ''தன்னாட்சியற்ற காவேரி மேலாண்மை வாரியம்'' வெறும் விசை ஒடிந்த அம்பாக இருக்கும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்


“காவிரி வரைவுத்திட்டத்தை ஆறுவார காலத்திற்குள் உருவாக்குங்கள். எவ்வித காலஅவகாசமும் கொடுக்கப்பட மாட்டாது”, என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகும், ஆள், அம்பு, சேனை என எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ள பேரரசை கையிலே வைத்துக்கொண்டு, ஒரு வரைவுத்திட்டத்தை உருவாக்க மூன்று மாத கால தாமதத்தை மத்திய அரசு செயற்கையாக உருவாக்கியிருப்பது தமிழக நலனை அடியோடு புறக்கணிப்பதாக அமைந்துள்ளது. மே 8 ஆம் தேதி “மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்கிறது. ஆகவே காவிரி வரைவுத் திட்டத்துடன் மத்திய நீர்வளத்துறை செயலாளர் 14 ஆம் தேதி ஆஜராக வேண்டும்”, என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டு கூறிய பிறகும் கூட, அன்றைய தினம் ஆஜரான நீர்வளத்துறைச் செயலாளர், “இதுதான் காவிரி வரைவுத்திட்டம். இதை அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டுமா அல்லது உச்சநீதிமன்றமே பரிசீலிக்கிறதா”, என்று ஒரு கேள்வியை உச்சநீதிமன்றத்தைப் பார்த்து எழுப்புகிறார் என்றால், மத்திய பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பை அமல்படுத்துவதில் எவ்வளவு தூரம் முரண்டு பிடிக்கிறது என்பது தெரிகிறது.
 

stalin

 

“வாரியமோ, ஆணையமோ எந்தப் பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை”, என்று வரைவுத் திட்டத்தைக் கொடுத்துவிட்டு மத்திய அரசு சொல்கிறது என்றால், இதே மத்திய நீர்வளத்துறைச் செயலாளர், “காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே உச்சநீதிமன்றத்  தீர்ப்பில் இல்லை”, என்று முன்பு கூறியது ஏன்? காவிரி நடுவர்மன்றம் தனது இறுதித்தீர்ப்பில் “Eminent Engineer" ஒருவர் காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறியிருக்கிறது. ஆனால் வரைவுத்திட்டத்தில் “இஞ்ஜினியர்” அல்லது “அதிகாரி” தலைமை என்று குறிப்பிட்டிருப்பது ஏன்? இப்போது தமிழக அரசின் சார்பிலும் காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை வலியுறுத்தாமல் திடீரென்று, “ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்க வேண்டும்”, என்று கூறியதன் பின்னணி என்ன?

 

“காவிரி மேலாண்மை வாரியம் தன்னாட்சி மிக்க அமைப்பாக இருக்க வேண்டும்”, என்று காவிரி நடுவர்மன்றம் குறிப்பிட்டுள்ளது.ஆனால் ''தன்னாட்சி அமைப்பு'' என்பது  பற்றி ஏன் தமிழக அரசு வாய்திறக்கவில்லை

 

தமிழக அரசின் சார்பில் வரைவுத் திட்டத்தின்படி அமைக்க வேண்டிய வாரியத்திற்கு என்ன அதிகாரம்? அதை வரைவுத்திட்டத்தில் தெளிவு படுத்துங்கள் என்று ஏன் உறுதிபட வாதிடவில்லை? தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட 14.75 டி.எம்.சி தண்ணீரை எந்த மாதத்தின் ஒதுக்கீட்டில் இருந்து குறைக்கப் போகிறார்கள்? தமிழகத்தில் விவசாயத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டிய மாதத்தில் வரும் ஒதுக்கீட்டிலிருந்து, குறைத்து விடாமல் இருக்க இந்த வரைவுத்திட்டத்தில் என்ன பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது? இதுபற்றி எல்லாம் தமிழக அரசு கேள்வி எழுப்பாததற்கு என்ன காரணம்? இன்றைக்கும் உச்சநீதிமன்றம் மீண்டும் தலையிட்டு, சில திருத்தங்களைச் செய்து, காவிரி வரைவுத்திட்டத்தை நாளை மீண்டும் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறது.

 

stalin

 

அந்த வரைவுத் திட்டத்திலாவது காவிரி நடுவர் மன்றம் சுட்டிக்காட்டிய “தன்னாட்சி அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா”, “தீர்ப்பை நிறைவேற்றும் அதிகாரம் அந்த வாரியத்திற்கு இருக்குமா” என்ற மிக முக்கியமான கேள்வி எழுந்திருக்கிறது. ஆகவே, மத்திய பா.ஜ.க. அரசும், அதிமுக அரசும் கைகோர்த்துச் செயல்படுவதால், தமிழகத்தின் உரிமைகள் தொடர்புடைய மிக முக்கியமான வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்வதற்கு முன்பு கருத்துக்களைத் தெரிவிப்பதற்குக் கூட அனைத்துக் கட்சிக் கூட்டத்தையோ, விவசாய சங்கப் பிரதிநிதிகளையோ, முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அழைத்துப் பேசாமல், ஜனநாயக நெறிமுறைகளுக்குப் புறம்பாக தன்னிச்சையாகச் செயல்பட்டிருப்பது, கண்ணும் காதும் வைத்தது போல் தமிழகத்தின் காவிரி உரிமையை மத்திய அரசிடம் தாரை வார்த்து, அதிகாரமில்லாத ஒரு குழுவை, "காவிரி மேலாண்மை வாரியம்”, என்ற பெயரில் அமைத்து, அந்தப் பெயரைக் கண்டே எல்லோரும் ஏமாந்து போவார்கள் என்ற நப்பாசையில், உடன்படுகிறார் என்ற சந்தேகம் எழுகிறது.

 

அதனால் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையில், அதிகாரம்மிக்க அதாவது காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பில் உள்ளவாறு தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய பா.ஜ.க. அரசு நாளை தாக்கல் செய்யும் வரைவுத்திட்டத்தில் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஏகபோக எண்ணத்துடன் இயங்கும் மத்திய அரசு ஊதும் மகுடிக்கு ஏற்றபடி ஆட்டம்போடும் பெட்டிப் பாம்பு போல் அதிமுக அரசு அடங்கி, முடங்கிக் கிடக்காமல், தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைய உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கும், மூத்த வழக்கறிஞர்கள் மூலம் உறுதியான வாதத்தை உச்ச நீதிமன்றத்திலும் நாளைய தினம் வலிமையாக  எடுத்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தன்னாட்சி அதிகாரம் இல்லாத மேலாண்மை வாரியம் என்பது, உள்ளீடற்ற வெறும் கூடு போன்றதும் விசை ஒடிந்த அம்பைப் போன்றதுமானது. இதை இப்போதாவது உணரவில்லை என்றால், அதுவே பெரும் பிழையாகி, சரித்திரத்தின் சாபத்திலிருந்து தப்ப முடியாது என கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.