
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிற சூழலில் இன்றைய கூட்டத்தில் மடிக்கணினி திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மடிக்கணினி திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துப் பேசுகையில், ''எம்ஜிஆர் திமுகவில் இருந்த பொழுதும் வெளியேறிய போதும் அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தவர்கள் நாங்கள். அவருடைய திரைப்படம் வெளிவந்த போது கூட அதைப் பார்த்து எப்படி இருக்கிறது என பேசும் அளவிற்கு இருந்தோம். ஆனால் இப்பொழுது அதிமுகவில் கூட்டல், கழித்தல் என எல்லாக் கணக்குகளையும் வேறு ஒருவர் (பாஜகவை மறைமுகமாக குறிப்பிட்டு) போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக தொண்டர்களை அபகரிக்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லேப்டாப் திட்டத்திற்கு ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சரியாக ஒரு மடிக்கணினி 20,000 ரூபாய் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மடிக்கணினி போல உங்கள் மடியில் உள்ள கனத்தை அவர்கள் பறித்துக் கொள்வார்கள். அதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்றார்.
அப்போது பாஜக எம்எல்ஏ வானிலை சீனிவாசன் சிரித்த நிலையில், ''என் கருத்துக்கு பாஜக வானதி ஸ்ரீனிவாசனே சிரித்து விட்டார். பூனை குட்டி வெளியே வந்து விட்டது என்று தான் அர்த்தம்'' என்றார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.