பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவரது சொந்தத் தொகுதியான கோபிசெட்டிபாளைத்தில் வாழும் மக்களுக்கு நாள்தோறும் குடிக்க தண்ணீர் வழங்காமல் அந்த நகராட்சி நிர்வாகம் நடந்துகொள்வதை கண்டும் காணாமல் போகிறாரே என மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.
கோபிசெட்டிபாளையத்தில் குடிநீர் பிரச்சனை, குப்பைகள் வீதி வீதியாக மலைபோல் தேங்கியிருப்பதை அப்புறப் படுத்தாமல் இருப்பது. புதை வடமின் தடத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைவது என பல கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மக்களைப் பற்றி கவலைபடாத அமைச்சர் செங்கோட்டையனை கண்டித்தும் 5ஆம் தேதி தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., கொ.ம.தே.க, வி.சி.க. என எதிர்க்கட்சிகள் கோபிசெட்டிபாளையத்தில் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள். சொந்த ஊர் மக்களுக்கு சோதனையை கொடுத்து சாதனை படைக்கிறாறோ செங்கோட்டையன்? என பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்களும் பேசிக்கொண்டனர்.