அரியலூர் - கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் பாயும் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள மீன்சுருட்டி என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்கள் வயலில் விவசாயம் செய்திருந்த நெல் வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நெல் வயலின் நடுப்பகுதியில் ஒருவித வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது.
இந்த சத்தத்தை கேட்டு அப்பகுதிக்குச் சென்று அருகில் பார்த்த போது அங்கு பெரிய முதலை அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்தது. உடனே விவசாயிகள் ஒன்று திரண்டு முதலையை பிடிப்பதற்கு துரத்தி உள்ளனர். விவசாயிகளை கண்ட முதலை அங்கிருந்து பதறியடித்துக் கொண்டு ஓடியது. இருப்பினும் முதலையை விடாமல் துரத்திய விவசாயிகள் சுருக்கு கயிறு மூலம் முதலையின் கழுத்தில் வீசி பிடித்தனர். பிறகு அங்குள்ள மரத்தில் முதலையை கட்டி வைத்துவிட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விவசாயிகளிடம் இருந்து கட்டி போடப்பட்டிருந்த முதலையை மீட்டு கொள்ளிடம் ஆற்று நீரில் விட்டுள்ளனர். விவசாயிகள் ஒன்று திரண்டு முதலையை பிடித்து கட்டி வைத்த சம்பவம் மீன்சுருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.