Skip to main content

முதுகுத் தண்டுவட பாதிப்பால் அவதியுறும் நோயாளிக்கு உதவும் அரியலூர் சமூக ஆர்வலர்கள்

Published on 05/05/2020 | Edited on 05/05/2020
pp


 
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கடைக்கோடி கிராமமான பளிங்காநத்தம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான வெங்கடேசன்(42) என்பவர் கடந்த 18 ஆண்டுகளாக கொத்தனார் வேலை பார்த்து வந்தார். கூலித்தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி புவனேஸ்வரி (38) வீட்டு வேலையை கவனித்து வருகிறார். மேலும் வெங்கடேசனுடைய மகன்கள் இருவரில் ஒருவர் மணி பாரதி டிப்ளமோ மெக்கானிக் (20) படித்து முடித்து கரோனா ஊரடங்கு முடிந்ததும் வேலைக்கு செல்ல காத்திருக்கிறார்.


இரண்டாவது மகனான மணி பாலாஜி (16) அரியலூர் மாவட்டம் தத்தனூரில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு டிப்ளமோ எலெக்ட்ரீசியன்  படிக்கிறார். 

வெங்கடேசன், கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் வரை கால் நடக்க முடியாமல் அவதியுற்று வந்துள்ளார். திடீரென்று நடக்க முடியாத சூழல் வந்தவுடன் மார்ச் 23 அன்று திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை முடிவில் தனது முதுகுத்தண்டுவடத்தில்  ஒரு பகுதி நொறுங்கியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே  உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். காப்பீடு அட்டை விண்ணப்பிக்க முயற்சிக்கும்வரை பொறுக்க முடியாது என மருத்துவர்கள் கூற,  தனது உறவினர்கள் மூலம் மற்றும் நண்பர்கள் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கி  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இது குறித்து வெங்கடேசனிடம் கேட்டபோது, என்னையே நம்பியிருந்த குடும்பத்திற்கு நான் ஒருவனே சம்பாதித்து குடும்பத்தை கவனித்து வந்தேன்.  இப்போது என்னால் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளேன். எனது பிள்ளைகளின் படிப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. எனது மருத்துவச் செலவுக்கும் மருந்து, மாத்திரைகள் வாங்கவும் வாரம் ஒரு முறை மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல வேண்டியுள்ளது.

தற்போதுள்ள எனது பொருளாதார சூழலில் அடுத்த வேளை சோறுக்கே வழியில்லை. எனவே எனது மருத்துவச் செலவை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எனது உடல் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையிலும் மாதந்தோறும் 5000 ரூபாய் மருத்துவச் செலவுக்கான உதவியோ அல்லது மருந்துகளாகவோ வழங்கிடவும், மருந்து வாங்கிட திருச்சி சென்று வர போக்குவரத்துக்கும் உதவ வேண்டும்.

மேலும் குடும்பத்துக்கு தேவையான உணவுப்பொருட்களையும் வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து நேரில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடியாத காரணத்தால், பளிங்காநத்தம் கிராம நிர்வாக அலுவலர்  ஜெய்சங்கர் மூலமாக மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர்கள் தங்க. சண்முக சுந்தரம், சின்னத்துரை ஜான் ஆகியோர் முதுகுத்தண்டுவட பாதிப்பால் அவதியுறும் வெங்கடேசனை சந்தித்து ஆறுதல் கூறி தங்களால் இயன்ற ஆயிரம் ரூபாய் நிதி உதவியினை அளித்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.