Skip to main content

பாட கல்வியுடன் வாழ்வியல் நெறிமுறைகளை கற்க மாணவர்களுக்கு வேண்டுகோள்

Published on 25/11/2018 | Edited on 25/11/2018
a


அண்ணாமலைப் பல்கலைக்கழக 82வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன் அனைவரையும் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விழாவிற்கு தலைமை ஏற்று மருத்துவம், பொறியியல், வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 5,808 மாணவர்கள் மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் பயின்று தேர்ச்சி பெற்ற 52,764 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.  இப்பட்டமளிப்பு விழாவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கங்கள் பெறும்  43 மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 235 மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு அறக்கட்டளைகளின் கீழ் ரொக்க பரிசுகளையும், பட்டச்சான்றிதழ்களையும். 277 முனைவர் பட்டங்களையும் வழங்கினார். 

 

an

 

விழாவில் இந்திய அரசின் மத்திய நிர்வாகத் தீர்ப்பாய தலைவர் நரசிம்ம ரெட்டி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி பேசுகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இந்திய அளவில் உயர்கல்வித்துறையில் தனக்கென தனியிடத்தை பெற்றுள்ளதாகவும், தற்கால கல்வியாளர்கள் பணம் ஈட்டுவதில் குறியாக இருப்பதை குறித்து கவலை தெரிவித்தார்.  ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பல்வேறு பாடப்பிரிவுகளின் மூலம் கல்வியை, குறிப்பாக சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு பரப்புவதாகவும் தெரிவித்தார். மேலும் மனிதர்களின் வாழ்வியல் நடத்தைக்கான வழிகாட்டி நூல் என திருக்குறளை குறிப்பிட்டார்.  மாணவர்கள் பாடங்களிலிருந்து கல்வி மட்டும் கற்காமல் அன்றாட வாழ்வியலுக்கான நடத்தைகளையும் மற்ற குடிமகன்களுடன் இசைந்து வாழ்வதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.  பட்டமளிப்பு விழா நடத்துவது ஒன்றும் புதிதல்ல, நம்முடைய பாரம்பரியமாக வருவது என்று தெரிவித்து, பட்டச்சான்று பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டு தெரிவித்துகொண்டார்.

 

பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத் ராம் ஷர்மா ,பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம்,  சண்முகசுந்தரம், மொழியியல் புல முதல்வர் திருவள்ளுவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர்  பாண்டியன், உமாமகேஸ்வரன், பதிவாளர்(பொ) ஆறுமுகம், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சந்திரசேகரன், அனைத்து புல முதல்வர்கள், இயக்குநர்கள், அதிகாரிகள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள், மற்றும் மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

 

பட்டமளிப்பு விழாவுக்கு ஞாயிறு காலையில் செந்தூர் ரயில் மூலம் சிதம்பரத்திற்கு வந்த ஆளுநர் நடராஜர் கோயிலுக்கு 9.10 சென்றார். அளுநர் வருகையையொட்டி கோயிலின் கீழசன்னதியில் கடைகளை திறக்ககூடாது என்று காவல்துறையினர் கெடுபிடிசெய்தனர். பின்னர் ஆளுநர் சென்ற பிறகே கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. கடந்த பிப் மாதத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்ள வந்தபோது சிதம்பரம் நகர வனிகர் சங்கம் சார்பில் சிதம்பரம் நகரத்தில் பாதள சாக்கடை பணிகளில் தரமற்ற வேலைகள் நடைபெறுவது என்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இது தமிழக மக்களையும் ஆளுநரை கவர்ந்தது.

 

 அதே போல் இந்த முறையும் ஆளுநர் வருகையின் போது கொள்ளிடம் ஆற்றில் சிதம்பரம் அருகே உப்புநீர் உட்புகாதவாறு தடுப்பனை கட்டாததை கண்டித்து உப்பு நீர் குடங்களுடன் ஆளுநரை வரவேற்கும் கவனஈர்ப்பு போராட்டத்தை அறிவித்தனர். பின்னர் போராட்டகாரர்களை மாவட்ட நிர்வாகம் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதியளிக்கப்பட்டது. அதேபோல் இந்த முறையும் ஆளுநருக்கு எதிராக எந்த சம்பவமும் நடைபெற்றுவிடகூடாது என்று விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை பட்டமளிப்பு விழாவை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆளுநருக்கு நேரமின்மை காரணமாகவே ஞாயிற்றுக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் கூறுகிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆபாச அண்ணாமலையை புறக்கணிப்போம்! - ஒன்றிணையும் ஊடகங்கள்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Nakkheeran condemn to Annamalai

சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த பேட்டி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதியை பேட்டியெடுத்த ஊடகவியலாளரை, "பாத்து... பக்குவமா.. பல்லு பட்டுடப் போதுன்னு கிராமத்துல சொல்வாங்க... எங்க பகுதிகளில் சொல்வாங்க. அதுபோல அந்த பத்திரிகையாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்'' என்று மிகவும் கீழ்த்தரமான இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எங்க ஊர்ப்பக்கம் இப்படித்தான் சொல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டதன் மூலம், மிகுந்த மரியாதையுடன் பழகக்கூடிய கொங்கு மண்டல மக்களின் மாண்பையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். 

ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய அரசியல்வாதியான அண்ணாமலை, இதுபோல் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசுவது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரே, தன்னிடம் பேட்டியெடுக்க வரும் பத்திரிகையாளர்களை குரங்குகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். அதேபோல் பத்திரிகையாளர்களை ‘அண்ணே’ என்று அன்பாகச் சொல்வதுபோல் பேசி ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்று ஏலமிட்டு விலை நிர்ணயிப்பது போல் நக்கலடித்து அவமானப்படுத்தியிருக்கிறார். பத்திரிகையாளர்களை பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் அடிமைகள் போலவும், கைக்கூலிகள் போலவும் சித்தரித்து தொடர்ச்சியாக நக்கலடித்து வருகிறார். அதேபோல் தன்னை எதிர்த்துக் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்களை அவர்களின் நிறுவனம் சார்ந்து குறிவைக்கும் மோசமான செயலிலும் ஈடுபடுகிறார்.

பத்திரிகையாளர்களின் பணி, போர் வீரர்களின் பணிக்கு ஒப்பானது. மிகுந்த நெருக்கடியான போர்ச் சூழலிலும்கூட பத்திரிகையாளர்கள் உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கி செய்திகளைச் சேகரிப்பார்கள். அபாயகரமான கொரோனா கால கட்டத்தில் நாடே முடங்கியிருந்தபோதும் பத்திரிகையாளர்கள் துணிச்சலாகக் களமிறங்கி செய்திகளைச் சேகரித்து வழங்கி வந்தனர். எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரம் நன்முறையில் செயல்படுகிறதோ, அங்கெல்லாம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும்போதுதான் சர்வாதிகாரம் தலைதூக்கும். 

மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் மாநிலத் தலைமையில் இருக்கும் ஒரே காரணத்தால், தைரியத்தால், தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ச்சியாகத் தரக்குறைவாக விமர்சித்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அடாவடித்தனத்தை நக்கீரன் வன்மையாகக் கண்டிக்கிறது. தனது அடாவடியான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும்வரை அவரது செய்தியையோ, படத்தையோ நக்கீரன் வெளியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல ஊடகங்களும் ஒன்றிணைந்து அண்ணாமலையின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர்

Next Story

பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Tamil Nadu BJP executives meeting with Prime Minister Modi

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை இன்று மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

இதனையடுத்து பிரதமர் மோடி ஓய்வெடுப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.  மேலும் தமிழக பாஜக நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருவது குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் இறுதி நிகழ்வுக்கு பிரதமரை அழைத்து வர நேரம் கேட்டுள்ளோம். இது குறித்து அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் இறுதி செய்ய வேண்டும். பிப்ரவரி மாதம் 2 வது வாரத்தில் பாத யாத்திரையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே பிப்ரவரி 2 வது வாரம் நிறைவடையும் பாதயாத்திரை நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமர் பங்கேற்பதற்காக மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.