
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கைச் சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதே சமயம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (08.04.2025) நடைபெற்றது. அப்போது நீதிபதி இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் ஞானசேகரனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஞானசேகரன் மீதான வழக்கில் சாட்சி விசாரணை ஏப்ரல் 15ஆம் தேதி (15.04.2025) தொடங்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னதாக ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் மற்றும் ஆதாரம் உள்ளதாக அரசு சார்பில் வாதிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.