Skip to main content

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு எலி, தவளை கூட்டணியாக அமைந்து விடும்! -அன்புமணி இராமதாஸ் 

Published on 24/09/2018 | Edited on 24/09/2018

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளான பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை இணைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன்மூலம் மத்திய அரசு மிகப்பெரிய தவறை செய்திருக்கிறது. வங்கிகள் இணைப்பு 3 வங்கிகளையும் கடுமையாக பாதிக்கும் என்பது தான் உண்மை.


 

anbumani



சிறப்பாக செயல்படும் இரு பொதுத்துறை வங்கிகளுடன் மோசமாக செயல்படும் ஒரு வங்கியை இணைத்தால் 3 வங்கிகளும் சிறப்பாக செயல்படும் என்பது தான் வங்கிகள் இணைப்பின் அடிப்படை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இதை நம்புவதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை; வரலாறுகளும் இல்லை. உலகம் முழுவதும் தாராளமயமாக்கல் கொள்கை தீவிரமாக செயல்படுத்தப் பட்டு வந்த நிலையில், வங்கிகள் இணைப்பின் பயன்கள் குறித்து உலக அளவில் ஆய்வு நடத்தப்பட்டன. 1991-2009 இடையிலான காலத்தில் வங்கிகள் இணைப்பால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து 2011-ஆம் ஆண்டில் உலக வங்கியும், தில்பர்க் பல்கலைக்கழகமும் இணைந்து 80 நாடுகளில் உள்ள வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தின. பொதுத்துறை வங்கிகளை இணைப்பதால் உலக அளவிலான பெரிய வங்கிகள் தான் உருவாக்கப்படுமே தவிர, வேறு எந்த பயனும் ஏற்படாது என்று இந்த ஆய்வில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி வங்கிகள் பாதிக்கப்படும் ஆபத்துகள் அதிகரிக்கும்; வங்கிகளின் லாபம் குறையும் என்றும் ஆய்வுகள் தெரிவித்தன. அவை மிகவும் சரி என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.


பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைப்பதன் மூலம் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது பெரிய வங்கி உருவாக்கப் படும் என்று கூறப்படுகிறது. அது உண்மை தான். ஆனால், அதனால் யாருக்கு பலன்? இந்தியாவில் முதல் வங்கிகள் இணைப்பு 1993-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரைப்படி பஞ்சாப் தேசிய வங்கியுடன் நியூ வங்கி இணைக்கப்பட்டது. இதன் பயனாக, அதுவரை அதிக லாபம் ஈட்டி வந்த பஞ்சாப் வங்கி 1996-ஆம் ஆண்டில் முதன்முறையாக ரூ.96 கோடி நஷ்டத்தை சந்தித்தது.


அதேபோல், பாரத ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகள் அனைத்தும் படிப்படியாக முதன்மை வங்கியுடன் இணைக்கப்பட்டன. 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த இணைப்பு நடைமுறைக்கு வந்தது. அந்த நிதியாண்டின் இறுதியில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.10,342 கோடி நஷ்டம் அடைந்தது. அதன்பிறகும்  பாரத ஸ்டேட் வங்கியின் இழப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் இணைப்பால்  ஏற்படும் எதிர்மறை விளைவுகளுக்கு இரு மோசமான உதாரணங்களைப் பார்த்த பிறகும், மீண்டும், மீண்டும் பொதுத்துறை வங்கிகளை இணைக்கத் துடிப்பது தற்கொலைக்கு சமமான முடிவு ஆகும்.


புதிதாக இணைக்கப்படவுள்ள பரோடா வங்கிக்கு ரூ.55,874 கோடி, தேனா வங்கிக்கு ரூ.15,866 கோடி, விஜயா வங்கிக்கு ரூ.7579 கோடி என மொத்தம் ரூ.79,319 கோடி வாராக்கடன்கள் உள்ளன. மூன்று வங்கிகளும் இணைக்கப்படும் போது, அவற்றின் செயல்பாடுகளை இந்த சுமை தடுக்கும். அது வங்கிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இது அவற்றின் வளர்ச்சிக்கு உதவாது. 


பரோடா வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்றுமே தங்களின் வணிகப் பின்னணிக்கு ஏற்ற வகையில் உத்திகளை வகுத்து வணிகம் செய்து வருகின்றன. இவை மூன்றையும் இணைக்கும் போது பல இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் கிளைகளை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். வெவ்வேறு தளங்களில் வாழ வேண்டிய தவளையும், எலியும் எப்படி ஒன்றாக வாழ முடியாதோ, அதேபோல் வெவ்வேறு வணிகப்பின்னணி கொண்ட பொதுத்துறை வங்கிகள் இணைந்து செயல்பட முடியாது. இதை மத்திய அரசு உணராதது அதிர்ச்சியும், வியப்பும் அளிக்கிறது.


பாரத ஸ்டேட் வங்கிகளுடன் அதன் இணை வங்கிகள் இணைக்கப்பட்ட போது, இணை வங்கிகளின் பணியாளர்கள் வேண்டாத விருந்தாளிகளாக நடத்தப்பட்டனர். பணியிட மாற்றம் என்ற பெயரில் அவர்கள் தொலைதூரங்களுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் வங்கிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. அதேபோன்ற விளைவுகள் இப்போதும் நடக்கும் வாய்ப்புகளை மறுக்க முடியாது.


எனவே, வங்கிகளின் நலனுக்கும், வங்கிப் பணியாளர்களின் நலனுக்கு எதிரான பரோடா வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அந்த மூன்று பொதுத்துறை வங்கிகளும் இப்போதுள்ள நிலையில் தொடர அனுமதிக்கப்பட வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.