Skip to main content

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஏ.ஐ.டி.யு.சி அறிவிப்பு!

Published on 22/12/2019 | Edited on 22/12/2019

ஜனவரி 8- ஆம் தேதி ஒரு நாள் நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில தலைவரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் மக்களவை உறுப்பினருமான கே. சுப்பராயன் அறிவித்துள்ளார்.


ஈரோட்டில் எம்.பி. கே.சுப்பராயன் பேசுகையில், "விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை காத்தல், ரயில்வே, சேலம் உருக்காலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்வதை நிறுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும், ஜனவரி 8- ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் செய்கிறோம்.

all over india employees one day strike announced aituc k subbarayan mp


இந்த போராட்டத்தில்  ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்கிறது. நாடு முழுவதும் 20 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள். கடந்த நூறு ஆண்டுகளாக தொழிலாளர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட 44 சட்டங்களை, மத்திய பா.ஜ.க. மோடி அரசு வெறும் நான்கு சட்டங்களாக மாற்றி, அவையெல்லாம் நீர்த்துப்போனதாக அமைத்து விட்டனர். 


முன்பு கொண்டு வரப்பட்ட 44 சட்டத்தையும் ஆளும் அரசுகளே கொண்டு வந்ததில்லை. தொழிலாளர்களின் போராட்டம் மூலம் கிடைத்த சட்டங்கள் தான் அவையெல்லாம். அவற்றை நான்காக குறைத்ததால், போராடி பெற்ற தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோகிறது. இந்த நடவடிக்கை தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக மாறுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட எந்த நிறுவனமும் இனி எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம். அதில் பணிபுரியும் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கலாம். இதனால் பல்வேறு விளைவுகள் ஏற்படும். 
 

ஆகவே தொழிலாளர்கள் தியாகம் செய்து பெற்ற சட்டங்களை குறைக்கக் கூடாது என்பதற்காகவும், அடுத்து இப்போது மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால், இந்திய நாடு துண்டாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையும் ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத, மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற சட்டங்களை அழிக்கக்கூடாது என்பதற்காக தான் நாங்கள் ஜனவரி 8- ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளோம்.
 

இதற்காக, வீதிகளில் பிரச்சார இயக்கம் நடத்துவது, தொழிலாளர்களை சந்தித்து பேசுவது, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் பங்கேற்க செய்ய உள்ளோம். அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் இந்த 'பாரத் பந்த்' திற்கு மத்திய பா.ஜ.க, மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. பினாமி அரசான அ.தி.மு.க.வை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுக்கிறது. மோடி அரசின் செயல்பாட்டை நாடு முழுவதும் ஒரு நாள் ஸ்தம்பிக்க வைப்போம்". இவ்வாறு சுப்பராயன் எம்.பி கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.