
தமிழகத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். புதுக்குடி சுங்கச்சாவடி, வல்லம் துணை மின் நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அற்புதபுரம் மின்மாற்றி, மேலவெளி ராஜலிங்க நகர் மின்மாற்றி, பெரமூர் ஒலத்தேவராயன் பேட்டை புதிய துணை மின் நிலையம் இடம் தேர்வு, கபிஸ்தலம் மின் மாற்றி ஆகியவற்றைத் தொடக்கி வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்திற்கு வரக்கூடிய தொழிற்சாலைகள் இன்று விண்ணப்பித்தால், நாளை மின் இணைப்பு வழங்கப்படும். மின்சார துறையின் கட்டமைப்பு வளர்ச்சியடைந்துள்ளது. ஒரு நாளைக்கு 56,000 டன் முதல் 60,000 டன் வரை நிலக்கரி தேவை என்பது உள்ளது. இருப்பினும் தேவையான கையிருப்பு உள்ளது. எனவே, தற்போது நிலக்கரி தொடர்பான பிரச்சனைகள் இல்லை.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 4,320 திறன் தேவை இருக்கிறது. ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில், ஒரு நாளைக்கு 1,800 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 3,500 மெகவாட் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பராமரிப்பு சிறப்பாகச் செய்யப்படுவதே. மற்ற மாநிலங்களில் பற்றாக்குறை இருக்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அனைவருக்கும் சமமான சீரான மின் விநியோகம் வழங்கப்படுவதே அரசின் நோக்கமாகும்” என்று தெரிவித்தார். மேலும் அவர், விளைநிலங்களில் மின்கம்பி அறுந்து விழுந்து உயிர் இழப்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு மின்சார வாரியம் கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.