Skip to main content

தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராவது...

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
court

 

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள்  நீதிமன்றங்களில் ஆஜராவது குற்றமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

தடை செய்யப்பட்ட சிபிஐ-மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கு நிதி உதவி செய்ததாக வழக்கறிஞர் முருகன் என்பவர் மீது தர்மபுரி கியூ பிரிவு பிரிவினர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆரம்பத்தில் முதல் தகவல் அறிக்கையில் முருகனின் பெயர் இல்லாத நிலையில், தற்போது உள்நோக்கத்துடன் அவரது பெயரை சேர்த்துள்ளதாகவும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு ஆதாரங்களும் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கு ஆதரவாக முருகன் நீதிமன்றத்தில் ஆஜராவதை தடுக்கவே காவல்துறையினர் இந்த பொய் வழக்கை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இதற்கு மறுப்பு தெரிவித்த க்யூ பிரிவு காவல்துறை தரப்பு,  மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் முருகனும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த சீனிவாசனும் சந்தித்து பேசியுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சீனிவாசன் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர்களிடமிருந்து மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.வி.முரளிதரன், மாவோயிஸ்ட் இயக்கத்தினர்களுக்காக வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில்  ஆஜராவது குற்றமல்ல என தெரிவித்தார். மேலும், முருகன் மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு நிதி உதவி செய்துள்ளார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி, அவரை விடுவிக்க மறுத்து தர்மபுரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.