Skip to main content

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் அதிமுக குற்றவாளிகள் விடுதலை;7 பேர் விடுதலையில் ஓரவஞ்சனை ஏன்?-ஸ்டாலின் கேள்வி!!

Published on 20/11/2018 | Edited on 20/11/2018

“தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் ஆயுள் தண்டனை குற்றவாளிகளான அதிமுகவினர் விடுதலை. ஆளுநரிடம் தங்களுக்குள்ள நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தித் தேவையானவற்றைக் கேட்டு சாதித்துக் கொள்ளும் அ.தி.மு.க அரசு 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன்?” என கேள்வி எழுப்பி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,

 

STALIN

 

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் ஆயுள் தண்டனை குற்றவாளிகளான அதிமுகவினர் மூவரை, ஆளுநரின் ஒப்புதலோடு, தமிழக அரசு  இன்று வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்திருப்பதும்; ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்கும் சட்ட வாய்ப்புகள் உரிமைகள் அதிகம் இருந்தும் அவர்கள் விடுதலையை தாமதிப்பதும்; பாரபட்சமானதும், அரசியல் தன்மை மிக்கதும், அநீதியானதுமாகும். அதிமுக அரசின் இந்த ஓரவஞ்சனைச் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

 

 

 

கடந்த 2000-ஆவது ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் முறைகேடு வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதால், சென்னை சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அதையொட்டி, அதிமுகவினர் தமிழகம் முழுக்க கலவரங்களில் ஈடுபட்டார்கள். அப்போது கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் தருமபுரிக்குக் கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர். வன்முறையாளர்கள் அந்த மாணவிகள் சென்ற பேருந்துக்குத் தீ வைத்ததில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமா என மூன்று மாணவிகள் கொழுந்துவிட்டெரிந்த தீயில் கதறக்கதறக் கருகி மிகப் பரிதாபமான நிலையில் உயிரிழந்தனர். இந்தியாவின் ரத்தத்தையே உறைய வைத்தது இந்த கொடூரமான சோக நிகழ்வு.

 

 

 

இந்த வழக்கில்  கைதான அதிமுக பிரமுகர்கள் மாது, நெடுஞ்செழியன், முனியப்பன் என மூவருக்கும் எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றம் அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றம் இந்த தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. ஆயுள் தண்டனைக் கைதிகளாக அவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, இந்த மூவரையும் முன்கூட்டியே   விடுதலை செய்ய கடந்த  நவம்பர் மாதம் ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால், அதை மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், தேக்கம் ஏற்பட்டது.

 

 

 

ஆயுள்தண்டனைக் கைதிகளை மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற அரசியல்சாசன உரிமை பொதிந்துள்ள 161 -வது பிரிவைச் சுட்டிக்காட்டி, மூவரையும் விடுவிக்க மீண்டும் ஆளுநருக்கு  தமிழக அரசு பரிந்துரைத்தது. இந்நிலையில்தான் ஆளுநரின் ஒப்புதலோடு தருமபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகள் மூவரும் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

 

 

 

இதே உரிமையின் படியேதான் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்யக் கோரி பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கிறார்கள். திமுகவும் இதே கோரிக்கையை  தமிழக அரசிடம் வலியுறுத்தியது. இவர்கள் விடுதலை தொடர்பாக, “ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

 

 

இதை ஏற்று செப்டம்பர் 9-ஆம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், இன்றுவரை ஆளுநர் அது குறித்து முடிவெடுக்காமலும் அதற்கான காரணத்தை வெளியிடாமலும் தாமதித்து வருகிறார். அமைச்சரவைத் தீர்மானத்தின் படி, ஏழு பேர் விடுதலை உத்தரவில் கையெழுத்திடுங்கள் என்று சொல்லக்கூடிய துணிச்சல் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இன்றுவரை துளியும் இல்லை. துணிச்சல் இல்லையா அல்லது மனம் இல்லையா என்று தெரியவில்லை.

 

 

 

சும்மா ஒப்புக்கு ஒரு வெற்றுத் தீர்மானம் போட்டு அனுப்பி விட்டு, ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ வலியுறுத்தாமல் இருக்கிறார்களே ஏன் என்ற சந்தேகமும் தவிர்க்க முடியாதது. நீட்  தேர்வுக்கு விலக்குக் கேட்டு ஒரு தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி விட்டு, அதுபற்றிக் கண்டு கொள்ளாமல் இருப்பது போல், வெள்ள நிவாரண உதவி கேட்டுக் கடிதம் அனுப்பி விட்டு, உரிய நிதியைப் பெற எந்த முயற்சியும் எடுக்காதது போல், மாநில உரிமைகளைப் பறிக்கும் நிதி ஆயோக் முடிவுகளை எதிர்க்காமல் இருப்பது போல, இதிலும் ஏனோதானோ என்றமுறையில் பட்டும்படாமல், வழுக்கலான வகையில் நடந்து கொள்கிறது எடப்பாடி அரசு.

 

ஆயுள் தண்டனைக் கைதிகளான இவர்களை முன் விடுதலை செய்யும் உரிமை மாநில அரசுக்கு இருந்தும் ஆளுநரிடம் உரிய முறையில் எடுத்துச் சொல்லி இரண்டுமூன்று தடவை வலியுறுத்தி எழுவரையும் விடுதலை செய்யாமல் தாமதிப்பது இவர்களின் விடுதலையில் ஆளும் அதிமுக அரசுக்கு சிறிதும் அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது.

 

 

ஏறத்தாழ 27 ஆண்டுகளாக பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அமைச்சரவையின் முடிவு; அந்த முடிவை நிறைவேற்றும் அடிப்படைப் பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. ஆளுநரிடம் தங்களுக்குள்ள நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தித் தேவையானவற்றைக் கேட்டு சாதித்துக் கொள்ளும் அதிமுக அரசு பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் உடனே விடுதலை செய்ய  வேண்டும் எனக்கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது