
காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார். காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் குழுக்களின் செயல்கள் குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாட்டில் காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து ஆற்று நீர் மாசடைவதாக மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் நீர் தொழில்நுட்ப பிரிவு, இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவற்றின் நிதி உதவியுடன், சென்னை ஐ.ஐ.டி குழு நடத்திய ஆய்வில் தெரியவருகிறது.
இதற்கிடையில் ஈரோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம், கரூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் இயங்கிவரும் சாய மற்றும் சலவை தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் ஏதும் காவிரி மற்றும் அதன் உபநதிகளில் வெளியேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர்கள் அடங்கிய 5 குழுக்கள் 06.10.2021 அன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுக்கள், மேற்கூறிய பகுதிகளில் இயங்கும் சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, அவைகளிலிருந்து கழிவு நீர் ஏதும் காவிரி மற்றும் அதன் உபநதிகளில் வெளியேற்றப்படுகின்றனவா என்பதை கண்டறிந்து வருகின்றன.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர்கள், காவிரி ஆற்றில் சென்னை ஐ.ஐ.டி நிபுணர் குழு கூறியுள்ள மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரை உள்ள பல்வேறு இடங்களில் 09.10.2021 அன்று நீர் மாதிரிகள் சேகரிப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் கலக்கும் உயர் உலோகங்கள், பூச்சிக்கொல்லி, மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றால் காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு சென்னை ஐ.ஐ.டி நிபுணர் குழு மற்றும் பல்வேறு வல்லுநர்களின் ஆலோசனைகளைக் கேட்டு பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேற்கூறிய குழுக்களின் ஆய்வறிக்கையின்படி காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.