Skip to main content

மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும்: கி.வீரமணி எச்சரிக்கை!

Published on 21/05/2018 | Edited on 21/05/2018


கர்நாடக மாநிலத்தில் குதிரை பேரத்திற்கு இடமின்றி மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து வெற்றி பெற்றதற்குப் பாராட்டுகள். நமது பொது எதிரி பி.ஜே.பி.யே என்ற அடிப்படையில் இரண்டே அணிகளாக இருந்து மதவாத பி.ஜே.பி.யை வீழ்த்தவேண்டும். 2019ல் மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால், அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கர்நாடகத்தில் ஜனநாயகம் எப்படியோ பிழைத்துள்ளது தற்காலிகமாக. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியாயத் தராசும் ஓர்ந்து கண்ணோடாத தேர்ந்த தீர்ப்பாக, கண்டிப்பும், கண்காணிப்பும் இருந்ததினால், கர்நாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டது. பா.ஜ.க.வின் ஒரு எம்.எல்.ஏ.வை தம்வசம் இழுக்க ரூ.150 கோடி வரை பேரம் பேசப்பட்ட தகவல் தொலைக்காட்சிளில் பரவிய தகவல் - நமது ஜனநாயகம் பண நாயகமாக மாற்றப்படும் கீழ்நிலையை உணர்த்தவில்லையா? பா.ஜ.க. முதல்வராக 3 நாள் கனவைச் சுமந்த எடியூரப்பா, தனது மூத்த முன்னோடியான வாஜ்பேயியின் வழியைப் பின்பற்றி வாக்கெடுப்புக்கு முன்னரே, அழுத கண்ணீரோடு பதவியை விட்டு விலகினார்.

இதற்குப் பெரிதும் காரணமான காங்கிரசு தலைமை, கர்நாடகக் காங்கிரசு, ஜனநாயகப் போராளிகள், கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் ஆகியோரின் திறமைமிக்க கண்காணிப்பும், மக்களின் உணர்வுகளும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையான அறப்போரும், உச்சநீதிமன்ற சட்டப் போர்மூலம்தான் ஜனநாயம் காப்பாற்றப்பட்டது. இதற்குக் காரணமான அனைவருக்கும் பாராட்டுகள்! இதன்மூலம் பாடம் கற்கவேண்டியவர்கள் பலர்.

முதலாவது பிரதமர் மோடி, அவரையொட்டி அவரது ஏவுகணையான பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோரின் ஆணவத்திற்குக் கிடைத்த பலத்த சம்மட்டி அடி; பா.ஜ.க.வின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தோல்வி இது என்பதில் அய்யமில்லை.

பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். என்ற பாசீச சக்திகளின் கொட்டத்தை அடக்க, அவற்றின் அதிகார ஆதிக்க ஆணவத்திற்கு முடிவு கட்டவேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதற்கான அச்சாரம்தான் இந்த மகத்தான தோல்வி! பண பலம், அதிகார பலம், ஊடக பலம், ஆள் பலம் (Money Power, Rule Power, Muscle Power, Media Power) இவைகளை நம்பியே களம் இறங்கியதோடு, நீதிமன்றங்களைக்கூட தமது விருப்பத்திற்கு வளைக்கலாம், பல மாநிலக் கட்சிகளை உடைக்கலாம் அல்லது ஆளுநர்கள்மூலம் பதவி நீக்கி, ஆயாராம் காயாராம் குதிரை பேரம் நடத்தி - பல வித்தைகள்மூலம் ஆட்சி அதிகாரம் என்பதை எப்படியும் கைப்பற்றலாம் என்ற சூழ்ச்சி எண்ணத்திற்குக் கர்நாடக நிகழ்வுகள் பலத்த அடி கொடுத்துவிட்டன!

ஹிட்லர் ஆட்சி வரும் - எச்சரிக்கை!

இன்னும் ஓராண்டு காலத்திலோ, அதற்கு முன்போ - வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மோடி ஆட்சி - பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பாசிச ஆட்சியை வீட்டிற்கு அனுப்பினால்தான் ஜனநாயகமும், அரசியல் சட்ட அறநெறிகளும் காப்பாற்றப்படும்; இல்லையேல், மீண்டும் ஹிட்லர் ஆட்சியில் இருந்த ஜெர்மன்போலத்தான் நம் நாடு ஆகிவிடும் ஆபத்து காத்துக் கொண்டுள்ளது!

பன் மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் உள்ள நாட்டில், ஒரே மதம் - ஹிந்து மதம்; ஒரே கலாச்சாரம் - சமிஸ்கிருத கலாச்சாரம்; ஒரே மொழி - சமஸ்கிருதம், ஹிந்தி. ஒரே வரி விதிப்பு - ஒரே மொழி - ஒரே கல்வி முறை என்றெல்லாம் ஆக்கி, மாநிலங்களின் அதிகாரங்களை விழுங்கி, ஒரே மத்திய ஆட்சி (Unitary Government - No Federal Setup)) என்று கூட்டாட்சி தத்துவத்தையே குழிதோண்டி புதைத்திடும் ஆபத்தான நிலைமைதான் மீண்டும் 2019 ல் பா.ஜ.க. வெற்றி பெற்றால் ஏற்படும்!

4 ஆண்டுகால ஆட்சியில், வேலையின்மை கொடி கட்டிப் பறக்கிறதே!

வங்கி ஊழல்களும், நட்டங்களும், பொதுமக்கள் பணமும் கொள்ளை போகின்றன! மக்களின் வரிப் பணம் - ஏழை, எளிய மக்களின் நலவாழ்வுக்கும் பயன்படுத்தப்படவில்லை. அம்பானிகளும், அடானிகளும் கொழுத்து உலகின் செல்வ நாடுகளில் இந்தியா 6 ஆவது ஆகி மார் தட்டுகிறது! ஆனால், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நிலை எந்த வகையிலாவது உயர்ந்துள்ளதா? இதற்கு ஒரே ஒரு பொதுத் திட்டம் - மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுதான்!

இதற்கு அனைத்து முற்போக்கு, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும், கட்சிகளும், ஓர் அணியில் ஒற்றுமையாகத் திரண்டு நின்று இந்த ஜனநாயக, மதச்சார்பின்மை, சமூகநீதி காப்பு அறப்போரினை நடத்திடவேண்டும். அனைவரும் ஒன்றுபட்டாக வேண்டிய வரலாற்றுக் கட்டாயம்; காலத்தின் கட்டாயம்! மூன்றாவது அணி என்ற பேச்சும், முயற்சியும், பா.ஜ.க.வுக்கு எருவிட்டதாகி விடக்கூடும். அந்த முயற்சி கைவிடப்படவேண்டும்.

எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும், நமது பொது எதிரி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.தான் என்று உணர்ந்து, ஓரணியில் திரளவேண்டும். ஆர்.எஸ்.எஸ். சார்பு அரசியல் நடத்தும் ஆளுநர்களைத் திரும்ப அழைக்கும் இயக்கத்தினை அகில இந்திய இயக்கமாகவே நடத்திடவேண்டும்.

தமிழ்நாட்டு ஆளுநர், கர்நாடக ஆளுநர் உள்பட இவர்களைத் திரும்ப அழைக்க வற்புறுத்தும் இயக்கம் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இது அவசரம் - இது அவசியம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“தளராது செயல்பட்டு வருபவர்” - கமல்ஹாசன் வாழ்த்து

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

kamalhassan birthday wishes to k veeramani

 

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி இன்று தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சென்று வாழ்த்தினார். அந்த புகைப்படங்களை அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, “அகவையில் மட்டுமல்ல, சுறுசுறுப்பிலும் எங்களை எல்லாம் மிஞ்சிய மானமிகு அய்யா கி. வீரமணி அவர்களின் 91-ஆவது பிறந்தநாளில் நேரில் வாழ்த்தி வணங்கினேன். தங்களின் வழிகாட்டுதல் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டும். பெரியாரியப் பெரும்பணி தொடர வேண்டும்! சமூகநீதிக் களத்தில் ‘வீரமணி வெற்றி மணியாக ஒலிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “தந்தை பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவரும், இடையறாத பணிகளுக்கிடையில் பேச்சு, எழுத்து, பத்திரிகை என்று தளராது செயல்பட்டு வருபவருமான என் மதிப்புக்குரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர்  கி. வீரமணி அவர்களுக்கு இப்பிறந்தநாளில் என் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 

 

 

 

Next Story

“பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு பெரியாரின் கொள்கை தான் அடித்தளம்” - சோனியா காந்தி

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Sonia Gandhi says Periyar's policy is the foundation to bring down the BJP

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலும், அடுத்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பா.ஜ.க. ஆட்சியை வீழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவை பெருக்கி வருகின்றனர். அதே போல், பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கி ஆதரவை பெருக்கி வருகின்றனர்.

 

இந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு, பெரியார் திடலுக்கு வருகை தர அழைப்பு விடுத்தும், இந்தியா கூட்டணியை முன்னெடுக்கும் பணிகளை பாராட்டியும் கடிதம் எழுதியிருந்தார். அவர் எழுதிய கடிதத்துக்கு சோனியா காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “பெரியார் திடலுக்கு என்னை அழைத்தற்கு நன்றி. மேலும், இந்தியா கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் நன்றி. 

 

சமூக நீதி தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல்களின் மூலம் தான் மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். பெரியாரின் கொள்கையும், தொலைநோக்கு பார்வையும் தான் நம்மை வழி நடத்தும். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வின் கருத்தியலை முறியடிக்க பெரியாரின் கொள்கைகள் தான் அடித்தளமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.