Skip to main content

ஆபாச பேச்சு: அதிமுக எம்எல்ஏவின் உருவபொம்மையை எரித்து வி.சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Published on 18/04/2018 | Edited on 18/04/2018
viduthalai siruthai katchi protest


 

சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தொழில்துறை அமைச்சர் சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் காட்டுமன்னார்கோயில் முருகுமாறன், சிதம்பரம் பாண்டியன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்களை வரவேற்கும் விதத்தில் நகரின் பல இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் வைக்கப்பட்ட பேனரில் முருகுமாறன் படத்தை கடைசியாக போட்டுள்ளனர். இதனை பார்த்த அவரது ஆதரவாளர்கள் வாட்ஸ்அப் மூலம் அவருக்கு தெரியபடுத்தியுள்ளனர்.
 

இதனால் ஆத்திரமடைந்த முருகுமாறன் பேனர் வைத்த எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் செழியனை தொலைபேசியில் அழைத்து, நான் மாநில அமைப்பு செயலாளர் என் படத்தையே கடைசியில் போட்டுள்ளீர்கள் என காது கூசும் வார்த்தையால் ஆபாசத்துடன் பேசியுள்ளார். மேலும் நான் திருமாவளவனையே பார்த்தவன். என்னை யாரும் ஆட்டமுடியாது என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ  சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதனை கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்கள் கட்சியில் மரியாதை இல்லை என்பதற்கு எங்கள் தலைவரை அசிங்கபடுத்தியுள்ளார் என்றும், அவரை கண்டித்து போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தனர்.
 

இந்நிலையில் புதன் கிழமை சிதம்பரம் கஞ்சிதொட்டி முனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சியின் செய்திதொடர்பாளர் திருவரசு தலைமையில் அக்கட்சியினர் 20 பேருக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி முருகுமாறன் உருவ பொம்மையை எரித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

 

இதுகுறித்து பேனரை வைத்தவர்களில் ஒருவரான பரங்கிப்பேட்டை அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜாங்கத்திடம் பேசியபோது, இது ஒரு சாதாரன பிரச்சனை அவர் பெரிது படுத்திவிட்டார். நாங்க எப்போதும் போல பேனர் அடித்துவிட்டோம். அதனை எங்களிடம் சொல்லியிருந்தால் மாற்றிகொண்டு இருந்திருப்போம். எதற்கு இப்படி ஆபாசமாக பேசுகிறார் என்று தெரியவில்லை என்றார். முருகுமாறன் ஆதரவாளர்களோ, எங்க அண்ணனுக்கு கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பதவி கொடுத்துள்ளது என்று தமிழகத்திற்கே தெரியும். ஆனால் சிலர் அவர் மீதுள்ள காழ்புணர்ச்சியால் அவரை அசிங்கபடுத்தும் விதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த கோபத்தில்  இப்படி பேசிவிட்டார். அவரது ஆபாச பேச்சு கண்டிக்கதக்கது. இதில் எதற்கு திருமாவளவனை இழுத்தார் என்று தெரியவில்லை என்கிறனர்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது