
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றிதான் என்றும், இந்த தீர்ப்பு ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றியைத் தராது என்றும் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றிதான். இந்த தீர்ப்பு ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றியைத் தராது. வேண்டுமானால் 5 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற வழிவகுக்கும். எடப்பாடி பழனிசாமி வசம் இரட்டை இலை சின்னம் இருந்தால் அது அ.தி.மு.க.வை மேலும் பலவீனப்படுத்தும். பொதுக்குழு குறித்து மேல்முறையீடு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தர்மயுத்தம் 1-ல் ஓ.பி.எஸ் வெற்றிபெற்றார். தற்போது அவர் நடத்தும் தர்மயுத்தத்தில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
2017 ஏப்ரல் மாதத்திலிருந்தே பா.ஜ.க தான் அதிமுகவை இயக்குகிறது. நீதிமன்றங்களையும் பா.ஜ.க தான் இயக்குகிறதா என்பதை நான் கூற முடியாது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெறும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் பல முறைகேடுகள் செய்வார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை உருவாக்கும் அணியில் அ.ம.மு.க அங்கம் வகிக்கும். தனியாக களம் காணவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தீர்ப்பில் பின்னடைவைச் சந்தித்ததால் ஓபிஎஸ்-ஐ அமமுகவில் இணையுமாறு அழைக்கமாட்டேன். அது மனிதத்தன்மையும் அல்ல. கமல்ஹாசன் பேசுவதையெல்லாம் காமெடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர் நடிகராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ளார்.
தேர்தலில் பரப்பரை மேற்கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். ஆளுநர் ஆளுநராகச் செயல்பட வேண்டும். அவர் பேசும் பேச்சு ஆளுநருக்கும் அழகல்ல; ஆர்.என்.ரவிக்கும் அழகல்ல. அவர் மத்திய அரசின் பிரதிநிதி, அதனால் அப்படி பேசுகிறார். ஆளுநர் பதவி என்பது தேவை இல்லை என்பது தான் எல்லோருடைய நிலைப்பாடும். ஆனால், அந்த பதவி இருக்கும்போது ஆளுநரை மதித்துத்தான் ஆக வேண்டும். தி.மு.க ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆளுநரை மதித்துத்தான் ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு தர்மசங்கடமான நிலை” என்றார்.