Skip to main content

அதிமுக விஷயத்தில் நடந்த தலைகீழ் மாற்றம்; சசிகலா கருத்து

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

Sasikala talks about AIADMK EPS OPS

 

அதிமுகவின் இருதரப்பும் பாஜகவை சந்தித்தது தவறு என சசிகலா கூறியுள்ளார்.

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை இபிஎஸ் ஓபிஎஸ் என இருவரையும் தனித்தனியே சந்தித்து ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

அப்போது பேசிய அவர்கள், “தமிழகத்திற்கு தேவை உறுதியான தேசிய ஜனநாயக கூட்டணி. அதனால்தான் சி.டி.ரவி இன்று இபிஎஸ் ஓபிஎஸ் இருவரையும் சந்தித்து ஜே.பி.நட்டா கூறியதை தெரிவித்துவிட்டு வந்துள்ளார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உறுதியான நிலையான வேட்பாளர் வேண்டும் என தெரிவித்துவிட்டு வந்துள்ளார். இதுவே பாஜகவின் கருத்து. கடைசி நாளான வேட்புமனு தாக்கல் பிப்.7 ஆம் தேதி வரை உள்ளது. பாஜகவின் நிலைப்பாடு எதிரணியாக தனித்தனியாக நிற்காமல் ஒரே அணியாக ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட்டு திமுகவிற்கு எதிராக வெற்றி பெற வேண்டும்” எனக் கூறியிருந்தனர்.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “தனித்தனியாக இருந்தால் அதிமுகவிற்கு நல்லதல்ல. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டு வருகிறேன். நான் அதிமுகவை ஒன்றிணைக்கும் பணிகளுக்கான அறிகுறிகள் இல்லை என்கின்றனர். அவர்களுக்கு தெரியவில்லை; எனக்கு ஒன்றிணைக்கிறேன் என தெரிகிறது. பாஜகவை இரு அணிகளும் மாறி மாறி சந்திக்கின்றனர். ஒரு காலத்தில் அதிமுகவை சந்தித்து பாஜக ஆதரவு கேட்டது. ஆனால் இப்பொழுது இப்படி இருக்கிறது. அதிமுக என்ன என்பதை நாம் முழுமையாக புரிந்துகொண்டால் இந்த தவறுகள் நடக்காது” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்