Skip to main content

பிரணாப் முகர்ஜியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டம்: கி.வீரமணி

Published on 11/06/2018 | Edited on 11/06/2018


 

Mohan Bhagwat and Pranab Mukherjee


மேனாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை ஆர்.எஸ்.எஸ். சிறப்புக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஆர்.எஸ்.எஸ். அழைத்ததன் பின்னணி - 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜக. வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்ற நிலை தெளிவான சூழ்நிலையில், பிரணாப் முகர்ஜியை பிரதமருக்கான பொது வேட்பாளராக நிறுத்திட ஆர்.எஸ்.எஸ். -- பா.ஜ.க. உருவாக்கிய திட்டம் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். தமது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்ததும், அதுபற்றி காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் தரப்பிலிருந்து அந்த அழைப்பை முகர்ஜி ஏற்றதைப்பற்றி விமர்சனக் கருத்துக்கள் வெளியானதும், பிறகு அங்கே பிரணாப் முகர்ஜி சென்று ஓநாயை சைவமாக்கும் மலைப்பிரசங்கம் செய்து விட்டுத் திரும்பியது பற்றியும் நமக்கு அதிர்ச்சியோ, வியப்போ ஏற்படவில்லை.
 

பிரணாப் முகர்ஜியின் உண்மை உருவம் என்ன?
 

காரணம், பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ்காரர் - முற்போக்குவாதி போர்வை அணிந்த இந்துத்துவ மனப்பான்மையாளர் - காஞ்சி சங்கராச்சாரியார்களின் அத்தியந்தசீடர்  - பல சாமியார்களின் ஆசியால்தான்  பதவிகள் தனக்கு வந்தன என்ற கருத்து உடையவர் என்பது உலகறிந்த உண்மையாகும்!

 

 

 

அவர் தனது அரசியல் பயணம்பற்றி ‘The Coalition years’ 1996-2012 என்று எழுதி, சென்ற ஆண்டு 2017 இறுதியில் டில்லியில் வெளியிட்ட ஆங்கில நூல் -  பக்கங்கள் 208-209களில் “Nothing exemplifies my temper more than the episode that involved the arrest of Jayendra Saraswati, the Shankaracharya of Kanchi, on 12 November 2004. It was a time when the entire country was celebrating Diwali. During the Cabinet meeting, I was extremely critical of the timing of the arrest and questioned if the basic tenets of secularism of the Indian state were confined to only Hindu monks and seers? Would the state machinery dare to arrest a Muslim cleric during Eid festivities? M.K.Narayanan, then Special Adviser to Prime Minister, also agreed with me. I immediately issued instructions for the Shankaracharya to be released on bail.”

அதன் தமிழாக்கம் வருமாறு:
 

2004ஆம் ஆண்டு நவம்பர் 12 அன்று காஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி கைது படலத்தில் வேறு எப்போதும் இல்லாமல், என்னுடைய மனநிலை விளக்க முடியாத அளவில் இருந்தது. அந்த நேரம் நாடுமுழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்டது.
 

கைது நடைபெற்ற மிகவும் நெருக்கடியான நேரத்தில், அமைச்சரவைக் கூட்டத்தில்  கடுமையான விமர்சனத்தை முன்வைத்தேன். இந்து மத சாமியார்களை, மடாதிபதிகளை கைது செய்வது மட்டுமே மதச்சார்பின்மையின் அடிப்படையான கருத்தா? என்று கேள்வி எழுப்பினேன். மாநில அரசு இதுபோன்று முசுலீம் மதக் குருமாரை  ஈத் விழாக்களின்போது கைது செய்யத் துணியுமா? என்று கேள்வி எழுப்பினேன். பிரதமரின் சிறப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் என் கருத்தை ஆமோதித்தார். சங்கராச்சாரியாரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தலை நான் உடனடியாகப் பிறப்பித்தேன்.

 

k.veeramani dk

 
கன்னியாகுமரியில் உள்ள பார்ப்பனர்களுக்குத் தேள் கொட்டினால்...
 

மத்திய உள்துறை அமைச்சராக இருந்த இவர் எவ்வளவு இந்துத்துவ வெறி கொண்ட பார்ப்பனர் என்பது  -  பூனைக்குட்டி வெளியே வந்ததுபோல இதன் மூலம் வெளிவந்து விட்டதே! இவர் கதருக்குள்ளே போர்த்தி  இருப்பது காவிதான் என்று நாட்டோருக்கு விளங்க வைத்து விட்டாரா இல்லையா? நாம் பல கூட்டங்களில் இந்நூலிலிருந்து படித்துக் காட்டி அப்போதே பெரியார் சொன்னது எத்தகைய மறுக்க முடியாத அனுபவ உண்மை - கன்னியாகுமரியில் உள்ள பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால், இமயமலையில் இருக்கும் பார்ப்பானுக்கும் நெறிகட்டும் என்ற தந்தை பெரியாரின் கூற்றினை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கட்டும் - உண்மை விளங்கும்.
 

ஒரு கொலைக் குற்றவாளி,  தான் கைதாவதிலிருந்து தப்பி மற்றொரு நாட்டுக்குச் செல்லும் முயற்சிகளை தமிழகக் காவல்துறை - உளவுத்துறை மூலம் அறியும்போது உடனடியாக கைது செய்யாமல் அது  பண்டிகை நாள் என்றா பார்த்து பஞ்சாங்கத்தைப் புரட்டிட வேண்டுமா? என்னே பார்ப்பன இந்துத்துவ பாசம் இவருக்கு! அதைவிட அதிர்ச்சியூட்டக் கூடிய மற்றொரு தகவல் இவரது வாக்கு மூலத்திலிருந்து வெளியாகி உள்ளது!
 

கைதானவரை ஜாமீனில் விடும்படி உள்துறை அமைச்சர் பதவியை அவர் பயன்படுத்தினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளது - சட்டப்படி நீதித்துறையில் தலையிட்ட குற்றமல்லவா? மனுதர்ம சட்டமா அப் போது நடைமுறையில் இருந்தது? இல்லையே - இந்திய அரசியல் சட்டமல்லவா?

 

 

 

டில்லியில் அப்போது பார்ப்பன வெங்கட்ராமன் மேனாள் குடியரசுத் தலைவர் - உண்ணாவிரதத்தில் உட்கார்ந்து அப்பதவியின் பாரம்பரிய மாண்பையும், மரியாதையையும் குறைக்கவில்லையா?
 

பிரணாப் மகளே சுட்டிக்காட்டியுள்ளாரே!
 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இத்தகைய தகுதிகளால் தான் பிராணப் முகர்ஜியை அதன் தலைமையகத்திற்கு அழைத்துள்ளது!

இவர் அங்கேபோய் செய்த பிரசங்கம் ஒரு நாள் செய்தி மட்டுமே;  இவர் ஹெட் கேவருக்கு செலுத்திய மரியாதை, ஆர்.எஸ்.எஸ். முக்கியத் தலைவர் மோகன்பகவத் பக்கத்தில் அமர்ந்திருந்த படம் - போஸ் கொடுத்ததுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு அப்பாவி மக்களை ஏமாற்றிட முக்கியத் தேவையாகும். அதை ஆர்.எஸ்.எஸ்.  அடைந்து விட்டதே! (இதை இவரது மகளான சர்மிஷ்தா முகர்ஜியே நன்றாக சுட்டிக் காட்டியுள்ளார்!).
 

பிரணாப் முகர்ஜி பா.ஜ.க.வின் பொது வேட்பாளரா?
 

இதையெல்லாம்விட நேற்றைய (10.6.2018) டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வந்துள்ள ஒரு செய்தி, மற்றொரு ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் ரகசிய திட்டத்தை அம்பலப்படுத்தி யுள்ளது.
 

அச்செய்தி வருமாறு:

 

 

 

அவர்களது கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரபூர்வ ஏடான சாமன்னா என்ற மராத்தி வார ஏடு, வருகின்ற 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க. மோடி அரசு மீண்டும் பதவிக்கு வர போதிய பெரும்பான்மை பெற வாய்ப்பில்லையென்றால், ஒரு பொது வேட்பாளர் என்ற போர்வையில் பிரணாப் முகர்ஜியைக் கொண்டு வரு வதற்குத்தான் இந்த முன் திட்ட ஏற்பாடு என்று டில்லி வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன என்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. உண்மையான காங்கிரஸ்காரர்கள் - மதச் சார்பின்மை, சமூகநீதி, பன் முகக் கலாச்சாரத்தில் ஆழ்ந்த நம்பிக் கையாளர்கள் பசுத்தோல் போர்த்திய இத்தகையவர்களை  அடையாளம் காணுவது அவசரம் - அவசியம்! இவ்வாறு கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; போட்டியின்றி தேர்வான பா.ஜ.க வேட்பாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
BJP candidate selected without competition at Lok Sabha elections

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உட்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதனால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.