![Postponement of petition seeking ban on AIADMK general body](http://image.nakkheeran.in/cdn/farfuture/SKcvjzU7hwX1yGutbADW-Wf6PPZLXksWhQZFOTTw-kY/1655720426/sites/default/files/inline-images/193_5.jpg)
வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடவுள்ள நிலையில், அதிமுக வட்டாரத்தில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று காலை கடிதம் எழுதிய நிலையில், மதியம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த எடப்பாடி ஆதரவாளர்கள் தங்களுக்கு அப்படி எந்தக் கடிதமும் வரவில்லை என்றும் திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையே, அதிமுகவின் பொதுக்குழுவிற்குத் தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவர் முன்கூட்டியே விசாரிக்க கோரிய நிலையில், இந்த மனு மீது எதிர்தாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி பிரியா உத்தரவிட்டார்.