Skip to main content

டெபாசிட் கூட கிடைக்காது... தி.மு.க.வில் இருந்து வெளியேறுவார்... ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

 

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்தார்.
 

அப்போது அவர், 
 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது, அவர்கள் ஆட்சி காலத்தில் செய்த சாதனைகள், திட்டங்கள் குறித்து தான் வாக்குகள் கேட்க வேண்டும். ஆனால் அவர்கள் ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் செய்யாததால் அதனை கூறி, வாக்குகள் கேட்க முடியவில்லை.

 

o panneerselvam



வருகிற 23-ந்தேதிக்கு பிறகு இந்த ஆட்சி கவிழ்க்கப்படும் என்று ஒரே வார்த்தையை பேசி வருகிறார். இந்த தேர்தலோடு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. அ.தி.மு.க. ஒரு ஆலமரம். தொண்டர்கள் இந்த ஆலமரத்தை காத்துக்கொண்டிருக்கிறார்கள். புயல், சுனாமி, பூகம்பம் எது வந்தாலும் அ.தி.மு.க. அசையாது.

 

எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது. எதிர் கட்சியாக தி.மு.க. இருந்தாலும் இன்னும் வன்முறையை கைவிடாமல் உள்ளது. அ.தி.மு.க. கட்டுப்பாடான இயக்கம். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பது உங்களுக்கு தெரியும். செந்தில் பாலாஜி எத்தனை கட்சிகள் தான் மாறுவார். தி.மு.க.வில் இருந்து குறுகிய காலத்தில் அவர் வெளியேறுவார். அங்கிருந்து அடித்து வெளியேற்றிவிடுவார்கள். அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து வருபவர்கள், தனித்து கட்சி தொடங்கியவர்கள் யாரும் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லை.

 

அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே செந்தில்நாதன் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட போது செந்தில்பாலாஜி சதி செய்து தோற்கடித்தார். இந்த தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் வழங்க வேண்டும். துரோகம் செய்த ஒருவர் வசமாக மாட்டியுள்ளார். அவருக்கு முடிவு கட்ட வேண்டும். இந்த தொகுதியில் தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. இவ்வாறு பேசினார். 
 


 

சார்ந்த செய்திகள்