Skip to main content

இல்லத்தரசிகள் தங்களது கோபத்தை வாக்குச் சீட்டில் வெளிப்படுத்துவார்கள்! - கி.வீரமணி

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

dddd

 

‘கரோனா தொற்று - கோவிட் 19 ஏற்படுத்திய வேலை கிட்டாத தன்மை, வறுமை, கடன் தொல்லை இவற்றிலிருந்து ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் இன்னமும் மீள முடியாத நிலை தொடர்கிறது.

 

விவசாயிகளின் வேதனையோ - இயற்கையின் ஒத்துழைப்பின்மையால், கதிர்முற்றி விளைந்த நெல்லைக்கூட அறுவடை செய்து, வருமானம் பெற முடியாத அளவுக்கு வயலில் பெய்த அதீத மழை காரணமாக பயிர்கள் மூழ்கி அழுகிய நிலை; ஏற்கெனவே அறுவடை செய்த நெல்லை மூட்டைகளாக மட்டுமே வைத்து விற்க முடியாத அளவுக்கு காவிரி டெல்டா பகுதியில் கடும் மழை ஈரத்தால் பாதிக்கப்பட்டு, பணம் பார்க்க முடியாத பரிதாப நிலை!

 

மத்திய - மாநில அரசுகளின் தவறான அணுகுமுறை!

 

இந்நிலையில், விலைவாசி ஏற்றம் நம் நாட்டுத் தாய்மார்களையும், எளிய மக்களின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பையும் முறிப்பதாகவே நாளும் அவர்கள் மீது அடிமேல் அடியாக மத்திய - மாநில அரசுகளின் தவறான அணுகுமுறையால் விழுந்த வண்ணமே உள்ளது!

 

பெட்ரோல், டீசல் விலை தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் வான்முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதுவும் இந்த ஒரு வாரத்தில் சுமார் ரூ.100 ரூபாயை நெருங்கி விட்டது; டீசல் விலையும் இதுபோல ரூ.84.16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏதோ காரோட்டிகளைத்தானே பாதிக்கும் என்று மேலெழுந்தவாரியாகக் கருதக்கூடாது! விவசாயிகளையும், விவசாயப் பொருள்களை ஏற்றி விற்பனைக் கூடங்களுக்கு எடுத்துச் செல்லும் பயணச் செலவுடன் இணைந்து, காய்கறிகள் விலை உள்பட அத்தியாவசிய பண்டங்களின் விலை ஏற்றத்தினை விரைவுபடுத்துகின்ற விளைவாகிவிடும்.

 

எடுத்துக்காட்டு, சிறிய வெங்காயம் 1 கிலோ (திண்டுக்கல் மார்க்கெட் போன்றவற்றில்) 160 ரூபாயாக உயர்ந்துள்ளது. இல்லத்தரசிகளின் கண்களில் வெங்காயத்தை உரிக்காமலே கண்ணீர் பீறிடும் கொடுமை!

 

காஸ் சிலிண்டர்களின் விலை ஒரு வாரத்திலேயே 2 முறை உயர்ந்து ரூ.75 கூடுதலாகி, ரூ.785 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் சென்னையில் காஸ் சிலிண்டர் விலை ரூ.569 ஆக இருந்தது - இப்படி திடீரென்று ஏற்றப்பட்டுவிட்டது!

 

குடும்பங்களில் மட்டுமா கேஸ் - எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன?

 

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வையொட்டி, வணிக சிலிண்டரும் விலை உயரக்கூடிய வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாகக் கூற முடியாத நிலை; இதனால் உணவகங்கள், தேநீர்க் கடைக்காரர்கள், சாலையோர உணவு தயாரிப்பாளர்கள், உணவகம் நடத்துவோர் சஞ்சலத்தில் உள்ளனர்.

 

அதன் விளைவு இறுதியில் நுகர்வோர், பயனாளிகள் தலையில்தானே வந்து விடியும்? ஏன் இந்த எரிவாயு விலை ஏற்றம்? பெட்ரோல் - டீசல் விலையேற்றம் எதனால்?

 

வன்மையான கண்டனத்திற்குரியது!

 

பன்னாட்டளவில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு - ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அத்துடன் மத்திய, மாநில அரசுகள் ஏற்கெனவே சில்லறை விற்பனையில் பெட்ரோலுக்கு 61 சதவிகித வரியும், டீசலுக்கு 56 சதவிகித வரியும் விதித்துதான் வசூலித்து வருகின்றன. இதன் காரணமாக சமையல் எரிவாயு - கேஸ் - சிலிண்டர் மாத்திரமல்லாமல், பெட்ரோல் - டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

 

இன்னொரு தகவல், சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவுசெய்து, அன்றைய நிலவரப்படி ஆன்லைனில் வாடிக்கையாளர் பணத்தைச் செலுத்திவிட்டாலும், சிலிண்டர் டெலிவரி செய்யும் நாளன்று விலை உயர்ந்தால், அந்தக் கூடுதல் தொகையை நிலுவைத் தொகையாக குறிப்பிட்ட எண்ணெய் நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன!

 

நடுத்தர மக்களைக் கசக்கிப் பிழிந்தெடுக்கலாமா?

 

இது பொதுவான விற்பனை - வாங்கல் நெறிமுறைக்கே விரோதமானது. ஒப்பந்தம் மாதிரி பணத்தை நிர்ணயம் செய்த பிறகு, அந்த விலைக்குத்தானே கொடுப்பதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது என்ற தார்மீக நெறி இதில் மீறப்படவில்லையா?

 

மத்திய - மாநில அரசுகள் ஒருபுறம், எண்ணெய் கம்பெனிகள் மறுபுறம் இப்படி எளிய, நடுத்தர மக்களைக் கசக்கிப் பிழிந்தெடுக்கலாமா?

 

இல்லத்தரசிகளே இதுதான் வளர்ச்சி! வளர்ச்சி! தேர்தலுக்குமுன் உங்களுக்கு இந்தப் ‘‘பரிசு!’’ நியாயந்தானா? வருகின்ற தேர்தலில் இல்லத்தரசிகள் தங்களுடைய கோபத்தை வாக்குச் சீட்டில் வெளிப்படுத்துவர்.

 

இந்த விலை ஏற்றத்தை உடனடியாக மத்திய அரசு குறைத்தாக வேண்டும்’ என தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் கி.வீரமணி. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Petrol, diesel price reduction

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை (15.03.2024) காலை 06:00 மணி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள், 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 94 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

முன்னதாக உலக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தீவிரமடையும் போராட்டம்; பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் கூட்டம்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
escalating struggle Rally in petrol stocks

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் என 3 குற்றவியல் சட்டங்கள் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வரை அமலில் இருந்தன. இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, நாடாளுமன்றத்தில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாக்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் கடந்த 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதே சமயம் பாரத நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிதாக கொண்டு வரப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தில் விபத்தால் மரணம் ஏற்பட்டால் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஹிட் அண்ட் ரன் (Hit and Run) வழக்கில் சிக்கும் ஒட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் ஒட்டுநர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை என இச்சட்டம் கூறுகிறது.

எனவே விபத்து தொடர்பான இந்த விதிமுறைக்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து உத்திரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கார், பேருந்து, லாரி ஒட்டுநர்கள் முக்கிய சாலைகளை முடக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் குஜராத், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓட்டுநர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தில் டேங்கர் லாரி ஓட்டுநர்களும் ஈடுபட்டுள்ளனர். இதனால் வட மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல்கள் இருப்பு உள்ள பெட்ரோல் பங்குகளை தேடி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் டீசல் மற்றும் பெட்ரோல் போன்ற எரிபொருள் விலை உயர வாய்ப்புள்ளது என்ற அச்சத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளில் குவிந்து வருகின்றனர்.

அதே சமயம் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஒட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று இரவு 7 மணியளவில் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.