Skip to main content

"இந்தியா முழுவதும் இந்து நாடாக மாற்ற பாஜக துடிக்கிறது" - பழ நெடுமாறன்  

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

pazha nedumaran talks about third party in parliamentary election at nagai  

 

நாகை மாவட்டம் நாகூரில்  நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "அரசியல் சட்ட வரம்பை மீறி சட்டத்தை அவமதித்து தமிழ்நாடு ஆளுநர் செயல்படக் கூடாது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீது மட்டுமல்லாமல் இந்தியாவில் ஆளுநராக இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை போன்று செயல்படும் ஆளுநர்கள் மீது இந்திய குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு போட்டியாக ஆளுநர்கள் தனி அரசாங்கத்தை நடத்த நினைத்து மாநில அரசுகளுடன் போட்டி போடுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு மாதக் கணக்கில் இழுத்தடித்து இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். பாஜகவிற்கு மாநில கட்சிகள், அகில இந்திய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜகவின் ஆட்சி ஒரு பாசிச ஆட்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பாசிச ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் பாஜக முன் மொழிந்துள்ள திட்டத்திற்கு மாற்று திட்டத்தை முன்மொழிய வேண்டும். எதிர் அணியை அமைக்க நினைக்கும் யாரும் பாஜகவை எதிர்க்கக் கூடிய மாற்று திட்டத்தை உருவாக்க முன்வரவில்லை.

 

ஒரே நாடு பாரதம், ஒரே மொழி சமஸ்கிருதம், ஒரே மதம் இந்து மதம் என்று சொல்லி வரும் பாஜக இந்தியாவை முழுவதுமாக இந்து நாடாக மாற்ற துடிக்கிறது பாஜக.  பாஜகவை எதிர்க்க மாற்று திட்டத்தை உருவாக்கி எதிர் அணியை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவை முறியடிக்க முடியாத நிலை உருவாகும்." என்று வருத்தம் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.