Skip to main content

“திமுகவில் யார் காலையாவது பிடித்துத்தான் பதவிக்கு வரமுடியும்... அதிமுகவில் அப்படி அல்ல!” - சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு!

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

Minister C.V.Shanmugam speech at vizhupuram admk meeting


விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏராளமான கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கட்சி முன்னோடிகள் கலந்துகொண்டனர்.  
 


அந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “அ.தி.மு.க தொண்டர்கள் கழகத்தின் மீது எப்போதும் அன்பும் அக்கறையும் கொண்டவர்கள். தங்களது உழைப்பைக் கொடுத்து அ.தி.மு.க ஆட்சியை மீண்டும் மலரச் செய்வார்கள். அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராகக் கொண்டுவரச் சபதம் ஏற்போம்.

 

கட்சியின் கரை வேட்டி கட்டிக்கொண்டு நடப்பதை நமது கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டரும் பெருமையாக நினைப்பார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, இறப்பதற்கு முன்பு கடைசியாகப் பேசிய வார்த்தைகள் “என் மறைவிற்குப் பிறகும் நூறாண்டு காலம் நம் கட்சியும் ஆட்சியும் தமிழகத்தில் மலர வேண்டும், தொடர வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்குத் தொண்டர்கள் பாடுபட வேண்டும்” என்று குறிப்பிட்டார். அதே நேரத்தில் தி.மு.க என்பது குடும்ப அரசியல் இயக்கம். அ.தி.மு.க. என்பது தொண்டர்களுக்கான இயக்கம். 

 

மறைந்த எம்.ஜி.ஆரின் கனவை நினைவாக்க, மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியைக் கொண்டுவருவதற்காக, மறைந்த நமது முதல்வர் ஜெயலலிதா கடுமையாகப் பாடுபட்டதைப்போல, மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி மலர, நமது கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். தமிழகத்தில் சிறப்பான, எளிமையான ஆட்சி தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த ஆட்சியில் மக்கள் அச்சமின்றி வாழ்கின்றனர். அனைத்து நலத்திட்ட உதவிகளும் மக்களுக்கு உடனுக்குடன் எளிதாகச் சென்று சேர்கிறது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்குவந்தால், தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும். தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை மதிப்போடும் மரியாதையோடும்  நடத்துபவர்கள் அ.தி.மு.க.வினர். 


தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுகின்றனர். இவர்கள், ஆட்சிக்கு வந்துவிட்டால் அரசு அலுவலர்களின் நிலைமை என்னவாகும் என்று நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை, பழங்குடியின மக்களை தரக்குறைவாகப் பேசியது தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி. இதுதான் தி.மு.க.வின் உண்மை நிலை. 


தமிழக மாணவர்களின் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலன் கருதி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது அ.தி.மு.க அரசு. அவர்களின் கல்விச் செலவையும் ஏற்றுள்ளது நமது அரசு. தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து, இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றி பெறவில்லை என்றால், நாம் இத்தனை ஆண்டு காலம் பட்ட கஷ்டங்கள் வீண்போய்விடும். இதற்குத் தொண்டர்கள் சிறிதும் இடம் கொடுத்துவிடக் கூடாது. 


அ.தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் கட்சியில் உள்ள இளைஞர்களைத் தட்டிக்கொடுத்து அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களை எதிர்ப்பாகக் கருதக் கூடாது. அ.தி.மு.க ஆட்சி, தமிழகத்தில் மலர்வதற்குப் பெரும் துணையாக இருந்தது, இருப்பது, இருக்கப்போவது இளைஞர்களும் இளம்பெண்கள் பாசறையினர்தான். தமிழகத்தில் மக்களுக்குப் பயனுள்ள அனைத்துத் திட்டங்களையும் மக்களுக்காகக் கொண்டு வந்தது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியின்போதுதான். அதேபோன்று தற்போது சிறப்பாக நமது ஆட்சி நடந்துவருகிறது. அது தொடர வேண்டும்.


கட்சியில் உழைக்கும் தொண்டர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்ப்பது அ.தி.மு.க கட்சியில்தான். தி.மு.க.வில் யார் காலையாவது பிடித்துத்தான் பதவிக்கு வரமுடியும். அ.தி.மு.க.வில் அப்படி அல்ல. எளிய தொண்டனும் உயர் பதவிக்கு வரமுடியும். அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் வழிகாட்டுதலின்படி இளைஞர்கள் நடந்து, தேர்தல் பணியாற்றிட வேண்டும். தமிழகத்தில் வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பணி செய்ய வேண்டும். வருகின்ற தேர்தல் நமக்கு வாழ்வா சாவா என்ற நிலையை எடுக்கக்கூடிய தேர்தல். 


இந்தத் தேர்தலில் இளைஞர் அணி, இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி என அனைத்து அணிகளும் முழுமூச்சுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில், இரண்டு நாட்களில் அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான பூத் கமிட்டி அமைத்து, பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டும். இளைஞர்கள் கடும் பணியாற்றிட வேண்டும். உங்களை நம்பித்தான் இந்த இயக்கம் இருக்கின்றது.” இவ்வாறு அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பாகப் பேசினார். 


கூட்டத்திற்கு வருகைதந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் தடபுடல் சாப்பாடு ஏற்பாடுகள் நடைபெற்றன. வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க தனது கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் குஷிப்படுத்தி, அவர்களை தயார்ப்படுத்தி வருகிறது என்பதற்கு உதாரணம் விழுப்புரத்தில் நடைபெற்றுள்ள செயல்வீரர்கள் கூட்டம். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.