Skip to main content

காங்கிரசை நெருங்குகிறதா திரிணாமுல்?; கூட்டணி குறித்து மம்தா பளிச் பதில்! 

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

mamata banerjee talks about upcoming parliamentary election alliance related  

 

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கூட்டணியை ஏற்படுத்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும், துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பேசுவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் நேற்று சந்தித்து பேசினர்.

 

இந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், "எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மெகா கூட்டணி அமைப்பதில் எந்த மோதலும் இல்லை. நிதிஷ் குமாரிடம் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் முன் வைத்தேன். ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கம் பீகாரில் இருந்து தொடங்கியது போல பீகாரில் அனைத்துக் கட்சி கூட்டத்தையும் நடத்தினால் அந்த கூட்டத்தில் நம்முடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யலாம். முதலில் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும். என்னை பொறுத்த வரை ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

 

பாஜகவை ஜீரோவாக்க வேண்டும். நாள்தோறும் பாஜகவினர் ஊடகங்களின் உதவியாலும், மக்களிடம் திணிக்கும் போலிக் கதைகளாலும் பெரும் ஹீரோவாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்காக பாஜகவினர் எதையும் செய்யவில்லை. சொந்த விளம்பரம் தேடுவதில் மட்டுமே அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இடம் பெற்றுள்ளன" என பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்