![K. Veeramani condemned!](http://image.nakkheeran.in/cdn/farfuture/LtJAMdcB9uAr-_qraz_VCRYezrFqF6ThEKuBbMsqskY/1649257314/sites/default/files/inline-images/STALIN_6.jpg)
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கும் நிலையில் நீட் (NEET), க்யூட் (CUET) நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யுமாறு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில், '2022-23 ஆம் ஆண்டு கல்வியாண்டில் பல்கலைக்கழக மானிய குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளுக்கு சேர்க்கை நடத்துவதற்காக நுழைவுத்தேர்வு நடத்துகிறது. ஏற்கனவே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் நுழைவுத்தேர்வை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி இது.
மத்திய அரசின் பிற்போக்குத்தனமான இந்த நடவடிக்கை இதனை நிரூபணம் செய்கிறது. நீட் தேர்வை போல் பொதுப்பல்கலைக்கழக் நுழைவு தேர்வு நாடு முழுவதும் பள்ளிகல்வி முறைகளை ஓரங்கட்டிவிட்டு, மாநில பாடத்திட்டத்தின் அடிப்டையிலான பள்ளிகளின் மேம்பாடு சார்ந்த கட்டமைப்புகளை வெகுவாக குறைத்து மதிப்பிட வழிவகுக்கும். இதனால் மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களை மாணவர்கள் நாடும் சூழல் உருவாகும். மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கையை வெகுவாக குறைத்துவிடும். ஒன்றிய அரசின் இந்தபோக்கு மற்றொரு விரும்பத்தகாத நடவடிக்கை என்றே கருதுகிறோம். எனவே மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும்'' என வலியுறுத்தப்பட்டிருந்தது.
![K. Veeramani condemned!](http://image.nakkheeran.in/cdn/farfuture/mFhi8gDDefEN2v7qPhqfvOZYnIC2shcz6NSCrTYehPg/1649257330/sites/default/files/inline-images/kvm.jpg)
இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வையும் (NEET) பொதுநுழைவு தேர்வான க்யூட் தேர்வையும் (CUET) மத்திய அரசு மியூட் செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் சமூகநீதி என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. விட்டால் தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகம் வரை மத்திய அரசு நுழைவுத்தேர்வை கொண்டு வரும் போல'' எனத் தெரிவித்துள்ளார்.