Skip to main content

“நீங்க கருப்புக்கொடி காட்டினால், நாங்க பச்சைக்கொடி காட்டுவோம்!” -அமைச்சரை ஆட்டிவைக்கும் மோடி போஃபியா!

Published on 09/04/2018 | Edited on 09/04/2018


 

kt rajendrabalaji 600.jpg


விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில்,  உண்டு உறைவிட நீட் தேர்வு பயிற்சி மையத்தை இன்று தொடங்கி வைப்பதற்கு வந்திருந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, செய்தியாளர்கள் சந்திப்பில், தன்னை ஆட்டிப்படைக்கும் ‘மோடி போஃபியா’வை, வழக்கம்போல் வெளிப்படுத்தினார்.    
 

“நல்ல டாக்டர்கள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான், தமிழ்நாடு அரசும்,  பள்ளிக்கல்வித்துறையும்,  அமைச்சர் செங்கோட்டையனும்  இதற்கான ஏற்பாடுகளை பெரிய அளவில் செய்திருக்கிறார். 
 

காவிரி பிரச்சனையில் மு.க.ஸ்டாலினுக்கு நடக்க வேண்டும் என்ற ஆசை; நடக்கிறார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, காவிரி பிரச்சனையைக் கண்டுகொள்ளாமல், இப்போது போராட்டம் நடத்துவது திமுகவின் ஏமாற்றுவேலை. 
 

பிரதமர் 12-ஆம் தேதி சென்னைக்கு வருகிறார் என்றால், பிரதமரிடம் முறையிட முதலமைச்சர் தயாராக இருக்கிறார். முறையிடுவார்; கோரிக்கை வைப்பார்; அழுத்தம் கொடுப்பார். காவேரி பிரச்சனையா? முல்லைப் பெரியார் பிரச்சனையா? கச்சத்தீவு பிரச்சனையா? அத்தனையிலும் துரோகம் செய்த கட்சி திமுக.; தியாகம் செய்த கட்சி அதிமுக. 

 

kt rajendrabalaji 600.jpg


 

கருப்புக்கொடி போராட்டம் நடத்தி பிரதமரை உசுப்பேற்றுவது,  மத்திய அரசை பகைத்துக்கொள்வது, மத்திய அரசுடன் சண்டை போடுவது, இதெல்லாம் காரியம் சாதிக்கிற வேலை கிடையாது. அவங்க கருப்புக்கொடி காட்டினார்கள் என்றால், நாங்க பச்சைக்கொடி காட்டுவோம். நமக்கு காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும்; காவிரி தண்ணீர் வேண்டும். இதுதான் நமது கோரிக்கை. பிரதமரிடம் சண்டை போடுவதா நமது கோரிக்கை? பிரதமரை பகைத்துக்கொண்டு, சண்டை போட்டுவிட்டு யாரிடம் போய் கோரிக்கை வைப்பது? யாரிடம் போய் பேசுவது? இந்தியாவின் அதிபராக(?) இருக்கக்கூடிய பிரதமரிடம் போய் சண்டை போடுவதா நமது வேலை? நமக்குக் கிடைத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, நாங்கள் உங்களது நண்பர்கள்தான் என்று நிரூபிக்கின்ற வகையில், அவரிடம் மனு கொடுப்போம்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்வோம்.  மத்திய அரசும் தேவையான முடிவை எடுக்கும். 
 

இங்கே எல்லாமே அரசியல்தான். கர்நாடகத்தில் அரசியல் நடந்துக்கிட்டிருக்கு. இங்கே திமுக ஸ்டாலின் பண்ணுவது அரசியல்தானே? ஏன்? மத்தியில் பவர்ஃபுல்லா இருக்கும்போது, நீர்ப்பாசனத்துறையைக் கேட்டு வாங்கியிருக்க வேண்டியதுதானே? அப்படி வாங்கியிருந்தால், காவிரி அணைக்கட்டு ஷட்டர் சாவியை வாங்கி கையில் வைத்திருந்திருக்கலாம் அல்லவா? செய்யவில்லையே?  காவிரி விவகாரம்  இழுத்துக்கொண்டே போக வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. காரணம் – கர்நாடகாவில் அவர்களுக்கு தொழில் இருக்கிறது; தொழிற்சாலைகள் இருக்கின்றன. திமுகவினரின் உறவினர்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற வேண்டும்; தொழிலைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான், திமுகவுக்கு இருக்கிறது. அதிமுகவினருக்கு அங்கே பெரிய தொழிற்சாலைகள் கிடையாது. உறவினர்களும் எந்தத் தொழிலும் பண்ணவில்லை. ஆக, எங்களுடைய நோக்கம் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ வேண்டும். 

மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்று சொன்னால் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மத்திய அரசு சந்திக்க நேரிடும் என்று ரஜினி சொன்ன கருத்து சரிதான். அவர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லையென்றால், தமிழர்களின் கோபத்துக்கு மத்திய அரசு ஆளாகும். அதைத் தடுக்க முடியாது. இதைத்தான் உரிய முறையில் அதிமுக அரசு கேட்கிறது. அதற்காக சண்டை போட்டுத்தான் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நியாயமான முறையில், அறப்போராட்டம் நடத்தி, கேட்பதுதான் நியாயம். அந்த அறப்போராட்ட வழியைத்தான் அதிமுக அரசு பின்பற்றி வருகிறது.” என்றார்.
 

தமிழகத்தில் பிரதமர் நரேந்திரமோடிக்கு ‘ஜிங்-சக்’ அடிப்பதில்,  முதல் இடம் தனக்கே என,  படுவிவரமாகப் பேசி வருகிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக ஆளுநரை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்; சிதம்பரத்தில் பரபரப்பு

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

cuddalore chidambaram cpi party against governor rn ravi black flag  

 

தமிழக ஆளுநரை கண்டித்து சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சீர்காழி சட்டநாதர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு இன்று (23.05.2023) சாலை மார்க்கமாக கடலூர் வழியாகச் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தங்கி செல்வதற்காக வருகை தந்தார். இதனையறிந்த  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் பி. துரை தலைமையில் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வி. எம். சேகர், மாவட்ட துணைச் செயலாளர் கோபு, வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம் அருகே வண்டிகேட் பகுதியில் தமிழக ஆளுநர் வருகையின்போது, நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சட்ட விரோதமாக குழந்தை திருமணம் செய்வதை நியாயப்படுத்தி பேசும் ஆளுநரை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது ஆளுநரை கண்டித்து, 'சனாதனவாதியாக செயல்படும் ஆளுநரே' என கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கருப்புக் கொடி போராட்டத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் குவிக்கப்பட்டு இருந்தனர். 

 

 

Next Story

விவசாயிகளின் கருப்பு தின போராட்டம் - காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு!

Published on 24/05/2021 | Edited on 24/05/2021

 

farmers

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஐந்து மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது டெல்லியின் எல்லைப் பகுதிகளில் முகாம் அமைத்து தங்கியுள்ள அவர்கள், மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாதவரை வீடு திரும்பப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர். மேலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி சாலை மறியல், இரயில் மறியல் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டனர். மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசு தினத்தன்று விவசாயிகள் ட்ராக்டர் பேரணியும் நடத்தினர்.

 

இந்தநிலையில் பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டு அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, தங்களது போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டியும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதன்முறையாக பதவியேற்ற 7ஆம் ஆண்டின் தினத்தையொட்டியும் மே 26ஆம் தேதியைக் கருப்பு தினமாக அனுசரிக்கப் போவதாக கூறியுள்ளது. மேலும் அன்றைய தினத்தன்று மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலும், வாகனங்களிலும், கடைகளிலும் கறுப்புக்கொடி ஏற்ற வேண்டும் எனவும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

 

இந்தநிலையில், விவசாயிகளின் இந்தக் கருப்பு தின போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல், கம்யூனிஸ்ட்  கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. இதுகுறித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சிகள், சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் போரட்ட அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

தொடர்ந்து, கடந்த மார்ச் 12ஆம் தேதி, விவசாயிகளைக் கரோனா பெருந்தொற்றிலிருந்து காப்பாற்ற வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சிகள், உடனடியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்த விகிதப்படி குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு, இது சம்மந்தமாக சம்யுக்தா  கிசான் மோர்ச்சாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். 

 

இந்தக் கடிதத்தில் சோனியா காந்தி, மு.க. ஸ்டாலின், சரத் பவார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்ரே, தேவகவுடா, ஹேமந்த் சோரன், ஃபரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், டி. ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகிய 12 எதிர்க்கட்சி தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.