
அதிமுக ஓபிஎஸ் அணி துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன், ஈரோட்டில் தங்கள் அணியின் கட்சித் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பிறகு செய்தியாளர்களிடம் பேசினார், "இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளை இணைக்கும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் முயற்சி அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
எங்களுக்கு மட்டும் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். உண்மையில், ஓபிஎஸ் சின்னத்தைப் பெறுவதற்கான படிவங்களில் கையெழுத்திடத் தயாராக இருக்கிறார். அதை இபிஎஸ்க்கு கொடுக்கவும் தயார் என்றார். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. எனவே, எங்கள் வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற மாட்டோம். தேசிய முற்போக்கு கூட்டணியில் இருக்கிறோம். எனவே, பா.ஜ.க. மற்றும் கூட்டணி தலைவர்களின் படங்கள் மற்றும் கொடிகளை பேனர்களிலும் பிரச்சாரங்களிலும் பயன்படுத்துகிறோம். எங்கள் தலைவர் ஓ.பி.எஸ். ஆனால், மோடி தேசத்தின் பிரதமர். அவர் உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர். அதனால் அவரது படத்தை பயன்படுத்துகிறோம். அவரது முகத்தை பயன்படுத்தி ஓட்டு வாங்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.
எங்கள் கட்சி மட்டுமே உண்மையான அதிமுக. தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பின்னால் இருக்கிறார்கள். இபிஎஸ் அணித்தலைவர் செங்கோட்டையன் தன்னிடம் 98.5 சதவீத தொண்டர்கள் உள்ளனர் என்கிறார். அதை அவர் நிரூபிக்கட்டும். உண்மையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரால் தான் கட்சி பலவீனமடைந்தது. இப்போது கூட ஒற்றுமையும், கூட்டுத் தலைமையும் வேண்டும். ஆனால், இபிஎஸ் அதை ஏற்கவில்லை. இப்போது தேர்தல் ஆணையமே அவர் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை நிராகரித்துவிட்டது. இபிஎஸ் தான் நீதிமன்றம் செல்லும் சூழ்நிலையை உருவாக்கினார். உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் நிலைப்பாட்டை அங்கீகரித்து அவருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கும்" என்றார்.