Skip to main content

“நான் நடந்து சென்றுதான் பதவியேற்றுக்கொண்டேன்..” - எடப்பாடி பழனிசாமி

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

EPS retaliated for stalin speech in campaign vehicle

 

சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, தான் பேசும் இடங்களில் எல்லாம் ஸ்டாலின் கூறும் விமர்சனங்களுக்கு பதில் அளித்து வருகிறார். இந்நிலையில் புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “திமுக ஆட்சியில் இருக்கும்போது விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் இருந்தது. காவிரி பிரச்சனையை, தான் தீர்த்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார், அது பொய்யானது. ஜெயலலிதா அரசுதான் காவிரி பிரச்சனையைத் தீர்த்தது. 

 

காங்கிரஸ் ஆட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது, அரசிதழில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை வெளியிட்டிருந்தால் காவிரி பிரச்சனை தீர்ந்திருக்கும் ஆனால் பல்வேறு போராட்டத்திற்கு இடையே காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது அதிமுக அரசுதான். எங்க தாத்தா, முப்பாட்டன் விவசாயக் குடும்பம். விவசாயம் செய்து வருகிறோம். நான் விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் ஏற்படுகிறது? நான் ஊர்ந்து சென்று பதவியேற்றதாக சொல்கிறார் ஆனால் நான் நடந்து சென்றுதான் பதவியேற்றுக்கொண்டேன்.

 

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்தை திமுகதான் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடியபோது பல்டி அடித்த ஸ்டாலின், போராட்டம் நடத்தி மக்களை ஏமாற்றுகிறார். விவசாயிகள் விஞ்ஞான ரீதியாக விவசாயம் செய்து வருகிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது. அதிமுக அரசு தனிச்சட்டம் இயற்றி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. விவசாயி மழை, வெயிலில் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். விவசாய நிலத்தைப் பார்க்க சிமெண்ட் ரோடு போட்டு சென்று பார்த்தவர் ஸ்டாலின். அவருக்கு விவசாயம் மற்றும் விவசாயிகளைப் பற்றி என்ன தெரியும்?

 

திமுக ஆட்சியின்போது மின்கட்டணத்தை ஒரு பைசா குறைக்க போராட்டம் நடத்தியபோது, விவசாயிகளைக் குருவி சுடுவதுபோல் சுட்டனர். இவர்கள் தற்போது விவசாயிகளைப் பற்றி பேசுகிறார்கள். வெயில், மழையில் பாடுபட்ட நான் உங்களைப் போல் கீழே இருந்துதான் மேலே வந்துள்ளேன். நாம் மேலே வருவதற்கு எவ்வளவு உழைக்க வேண்டும் என கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கு தெரியும். ஸ்டாலின் உழைத்து வரவில்லை, மற்றவர்களின் உழைப்பில் வந்தவர். மேலும் நிர்வாகத்திறன் இல்லாதவர். 

 

தமிழ்நாட்டில் வறட்சி பாதிப்பின்போது ரூ.242 கோடி நிவாரணம் கொடுத்தது ஜெயலலிதாவின் ஆட்சி. இந்தியாவிலேயே பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு அதிக நிவாரணம் கொடுத்துள்ளது. இந்தப் பகுதியில் பருவம் தவறி ஜனவரி மாதத்தில் மழை பெய்தது. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தகுந்த இழப்பீட்டை அதிமுக அரசு வழங்கியுள்ளது. ‘உழவன் செயலி’ மூலம் விவசாயிகள் விஞ்ஞானமுறை திட்டங்களை அறிந்துகொள்கிறார்கள். இது எல்லாம் ஸ்டாலினுக்குத் தெரியாது, பொய் சொல்ல மட்டும்தான் அவருக்குத் தெரியும்.

 

திமுக என்றால் கலைஞர் குடும்பம், கலைஞர் குடும்பம் என்றால் ஸ்டாலின் குடும்பம் ஆகும். திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் கடைக்குக் கடை மாமூல் வாங்குவார்கள். கடைகாரர்கள் எல்லாம் பாத்துக்கோங்க, தமிழகம் தற்போது சாதி சண்டை இல்லாமல் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது” என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.