Skip to main content

“அதிகார பலமிக்கவர்களின் ஆதரவோடு சாராய விற்பனை நடக்கிறது” - இ.பி.எஸ்

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
EPS alleges Liquor sale is going on with the support of powerful people

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று (19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்து பலியானோரின் எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தச் சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “விஷச் சாராய மரணம் வேதனை அளிக்கிறது. இவ்வளவு அதிகமான நபர்கள் உயிரிழந்த செய்தி வேதனையை ஏற்படுத்துகிறது. கள்ளச்சாராயம் குடித்து மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வருகிறது. 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் அனைவருமே மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள். கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்ற இடத்திற்கு அருகில் தான் காவல் நிலையம் இருக்கிறது. காவல் நிலையம் அருகிலேயே சாராயம் விற்பனை என்றால் ஆட்சி அதிகாரம் எப்படி இருக்கிறது எனத் தெரிந்துகொள்ளலாம். 

ஆளுங்கட்சி மற்றும் அதிகார பலமிக்கவர்களின் ஆதரவுடன்தான் இந்தக் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது. மிகப்பெரிய கும்பல் இதற்குப் பின்னால் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. முதலில் வீர வசனம் பேசுகிறார்கள். சம்பவம் முடிந்த பிறகு அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஏற்கெனவே நடந்த சம்பவத்தையும் சிபிசிஐடி விசாரித்தது. அந்த வழக்கு என்னவானது?. கடந்த ஆண்டு நடந்த கள்ளச்சாராய மரண வழக்கில் யாரெல்லாம் கைது செய்யப்பட்டனர் என்பது கூட தெரியவில்லை. கள்ளக்குறிச்சி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 

சென்னையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளித்திருந்தால் பலரைக் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், இந்த மரணத்தை வயிற்றுப்போக்கு, வயிற்று வலி என முன்னாள் ஆட்சியல் பச்சைப் பொய் கூறினார். இந்த மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை” எனக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழக அரசைக் கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்! (படங்கள்)

Published on 27/06/2024 | Edited on 27/06/2024

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக நேற்றும் (26.06.2024) அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் எனச் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல்  அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதனைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரியும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகினறனர். அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

படங்கள் - எஸ்.பி.சுந்தர்

Next Story

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதம்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
ADMK legislators fast

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக நேற்றும் (26.06.2024) அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகினறனர். சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் திமுக முதல்வர் தயங்குவது ஏன்?. கள்ளச்சாராய மரணங்கள் 60ஐ தாண்டியுள்ள நிலையில், இன்று வரை கள்ளக்குறிச்சி சென்று மக்களைச் சந்திக்காதது ஏன்?. கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிப்பதோடு, இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவிவிலக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.