Skip to main content

“எங்கெங்கு காணினும் ‘இந்தி’யடா..” - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Published on 18/10/2024 | Edited on 18/10/2024
Edappadi Palaniswami condemns the Hindi festival held in Chennai

சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களையொட்டி கடந்த ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையொட்டி இன்று (18.10.2024) நடைபெற்ற இந்த கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றுள்ளார். டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சம்பவம் பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விழாவிற்கான அழைப்பிதழ் வெளியான உடனே தமிழ்நாட்டின் பல்வேறு ஆரசியல் கட்சி தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், ‘இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியா போன்ற பல்வேறு மொழியில் பேசும் நாட்டில் இந்திக்கு தனி இடம் அளிக்க இயலாது. அரசமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை தரவில்லை. தகவல் தொடர்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்தப்படுகிறது” என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “எங்கெங்கு காணினும் சக்தியடா ” என்று பாவேந்தர்  பாரதிதாசன் பாடினார். தொட்டதெற்கெல்லாம் அவரை குறிப்பிடும் இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் நாட்டில் “எங்கெங்கு காணினும் இந்தி” -யடா என்று பாடிக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும். இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மத்திய அரசு முன்னெடுப்பது ஏற்கக்கூடியதல்ல” என்று தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 

இந்த சூழலில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி தின விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும் மக்களைக் கொண்டு தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர் என்றும் கூறினார். மேலும் அவர், தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தமிழை இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்ல என்ன செய்தனர்? தமிழகத்தில் மட்டுமே 3வது மொழியை அனுமதிக்க மறுக்கின்றனர்” எனக் கூறி விமர்சனம் செய்திருந்தார். இதற்கிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த விழாவில், பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘திராவிடம் நல் திருநாடு’ என்ற வார்த்தை விடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்