Skip to main content

மலைவாழ் மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்...! எடப்பாடி பரப்புரை

Published on 23/03/2019 | Edited on 23/03/2019


மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மலைவாழ் மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும், பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையின்போது கூறினார்.

 

edappadi and suthish


கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019), கருமந்துறையில் பரப்புரையை தொடங்கினார். முன்னதாக அவர் அங்குள்ள வெற்றி விநாயகர் கோயிலில் வழிபட்டார். 


கள்ளக்குறிச்சி வேட்பாளர் சுதீஷ் மற்றும் சேலம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன், அமைச்சர் சி.வி.சண்முகம், எம்எல்ஏக்கள் சித்ரா, வெங்கடாஜலம், தேமுதிக நிர்வாகி இளங்கோவன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோரும் அந்த கோயிலில் வழிபட்டனர். இதையடுத்து, சிறிது நேரம் அப்பகுதி மக்களிடம் நடந்து சென்று எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார். 


பின்னர் திறந்த வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார். அப்போது பேசியதாவது: 


இந்தியா பாதுகாப்பாக இருக்க, மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். கடந்த 16 ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் பங்கு வகித்த திமுக, மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களையும் செய்ய தவறிவிட்டது. பாஜகவை மதவாத கட்சி என்று விமர்சித்து வரும் திமுக, கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அக்கட்சியுடன்தான் கூட்டணி வைத்து இருந்தது. அப்போது மதவாத கட்சியாக தெரியவில்லையா? இப்போது அதிமுக, அக்கட்சியுடன் கூட்டணி வைத்ததால் மதவாத கட்சி என்று சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது திமுக.


மத்தியில் ஒரு ஆட்சியும் மாநிலத்தில் வேறு ஒரு ஆட்சியும் நடந்தால் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியாது. நூறு கோடி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பிரதமர் மோடி ஆட்சி அமைய வேண்டும். தமிழக மக்களின் நலன் கருதி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு கோடி மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயும், பொங்கல் பொருள்களும் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற முயற்சி செய்த கட்சிதான் திமுக. மக்களுக்கு பயன்தரும் திட்டத்தை செயல்படுத்தினாலும் அதை முறியடிக்க நினைக்கும் கட்சியாக திமுக இருக்கிறது. 


வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த உடனே உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர் வழக்கு தொடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவக்கூடிய செயல் திட்டங்களை திமுக தொடர்ந்து முறியடிக்கிறது. கட்சி பாகுபாடின்றி 2 கோடி மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கம்தான் அதிமுக அரசுக்கு உள்ளது. 


நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் மலைவாழ் மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்படும். பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். ஏற்கனவே சட்டசபையில் 110-வது விதியின் கீழ் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைவாசல் அருகே, 900 ஏக்கரில் 396 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்படும். இதில் கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.  


அதிமுக ஆட்சி செய்வதைப்போல திமுக ஒருபோதும் செய்யாது. பொய் வாக்குறுதிகளை கூறிவிட்டு செயல்படுத்த முடியாத ஆட்சியாக திமுக இருக்கும். கடந்த மாதம் இந்தியாவையே உலுக்கிய 40 ராணுவ வீரர்கள் படுகொலை சம்பவம், அனைத்து மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியது. விமான போரின்போது எதிரிகளின் பிடியில் இந்திய விமானி பிடிபட்டபோது ஒட்டுமொத்த இந்திய மக்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் விதமாக பேசி, பெருமையைத் தேடித்தந்தார் மோடி. விமானப்படை மூலம் குண்டுகள் வீசி எதிரிகளை தாக்கிய பெருமையும் பிரதமருக்கு உண்டு. 130 கோடி மக்களின் பாதுகாப்பை காக்க மத்தியில் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய வேண்டும். 


தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச்சாலை உள்ளிட்ட மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்பட மாட்டாது. தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.